அக்னி அவதாரங்கள்




ஒளியின் மறு உருவே –அண்ட
வெளியின் முதல் உருவே இப்புவியில்
உனக்குத்தான் எத்தனை
அவதாரம்..?

முகம் சிவந்தால் கனல்-புவியை
முத்தமிட்டால் அனல்
கோபம் கொண்டால் தீ- திருக்
கோயில் என்றால் தீபம்
வெகுண்டெழுந்தால் சுவாலை-நீ
விளைந்திருந்தால் அது பாலை…

நீ சாதனையாளர்களை
சலனப்படுத்திய
அக்கினிப்பொறிகள்…
ஏவுகணையாய் எம் அபுல் கலாமை
இமயம் உயரச்செய்த
அக்கினிச் சிறகுகள்…
பார் புகழ எம் பாரதியை
பாட்டெழுதச் செய்த
அக்னிக் குஞ்சுகள்…

நீ எடுப்பார் கைப்பிள்ளை..!
தீவிரவாதிகளின் கலாபக்காதலி
கொள்ளையர்களின் குலவிளக்கு
அநாகரீக அரசியலின் குடிசை மாற்று வாரியம்..
அடுப்பில் உனை அடைத்தால்
அறுசுவை உணவு…
அணுவில் உனை அடைத்தால்
கருகிடும் உலகு..!
நீ எடுப்பார் கைப்பிள்ளை..!

நீ மானிடர்களின் சாபக்கேடு
அன்பாய் எம்மை அணைத்தாலும்
வம்பாய் போய்விடும்
பாசமாய் உனைத்தொட்ட போதும்
மோசமாய் போய்விடும்
நீ மானிடர்களின் சாபக்கேடு

நீ பாசக்காரப் பயல்
அடங்காப்பிடாரி உன்னை
அடக்க இருவரால் மட்டுமே இயலும்
ஒன்று உன் அன்னை மணல் –மற்றொன்று
உன் காதலி தண்ணீர்..!
எத்தனையோ பேரின் கண்ணீருக்கு
அடங்காதவன் உன் காதலி
தண்ணீருக்கு மட்டுமே அடங்குவாய்
அவள் அணைத்தால் மட்டுமே- நீ
அணைவாய்..
நீ பாசக்காரப் பயல்

அக்கினியே
அன்பாய் ஒரு வேண்டுகோள்
ஆக்கம் மட்டும் தொட்டு விடு
அழிக்கும் குணமதை விட்துவிடு
உன் நோக்கம் மட்டும் சரியானால்- இப்புவி
போற்றும் சக்தி நீ தானே..

சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகள்-2

"சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகள்" இது ரஹீம் என்ற ஒரு தனிப்பட்ட இளைஞனின் கதை மட்டுமல்ல,கண்ணீரெல்லாம் வியர்வையாகவே இனம் காணப்படும் இந்த அரபுதேசத்தில், தன்னை எரித்து தன் பந்தம் காக்கும் பலத்தியாகச்சுடர்களின் வரலாறு இது…உணர்ச்சிகளை உள் புதைத்து தன் உறவுகளை உயரச்செய்யும் பல உன்னத மனிதர்களின் உண்மை நிலை இது…வாசியுங்கள்..இந்த பாலைவனப்ப்ழுதிக்காற்றை நீங்களும் கொஞ்சம் சுவாசியுங்கள்…

இதற்கு முன்...



இனிமேல்...
ஒருவேளை பொண்ணு பார்த்து வைத்திருப்பார்களோ..? என்ன சொல்வது ஒத்துக்கொள்ளலாமா..? இல்லை பிடிக்காததை போல் நடிக்காலாமா? என்று சிந்தித்த படி “அம்மா” என்றேன்…

ரஹீமு, எப்படியப்பா இருக்கே? அஜீசு தம்பி வந்திருந்தான், நம்ம இன்ஜினியர் வீடு விலைக்கு வருதாம்..! ஊருலேயே நல்லா வாழ்ந்தவரு, அவசரமா பணம் தேவைன்னு விக்கறாராம்.அதை வாங்கினா, நமக்கும் பெருமையா இருக்கும். எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது, அடக்கிக்கொண்டு பொறுமையாக, “ அம்மா நமக்கு இன்னொரு வீடு தேவையா ? என்றேன்.“இல்லே ரஹீம், இந்ந்த வீடு பழசாப் போச்சு, அக்காமார்கள் வந்தா தங்கக் கூட வசதியில்லை, இன்ஜினியர் வீடு ரொம்ப வசதியானது, விலையும் கம்மியா வருதாம், ‘ அப்பா, இன்ஜினியர் தம்பி மாதிரி உன்னையும் பெரிய இன்ஜினியர் ஆக்கனும்னு நினைச்சாரு , அது தான் நடக்கலை, அவர் வீட்டையாவது வாங்கி அப்பா கனவை நினைவாக்குடா ரஹீம்’. அம்மா கலங்க ஆரம்பித்தார், எனக்கு என்ன சொல்வதென்று தெரியலை வழக்கம் போல சரி என்றேன். லைன் கட் ஆனது, என் கனவுகளும் தான்…

என் வீட்டு கோபம் சமூகம் மீது திரும்பியது, சே .. என்ன சமூகம் இது? பெண்களை மட்டும் குமராக சித்தரிக்கும் சமூகம், ஆண்களுக்கு இளமை இல்லையா, ஆசை இல்லையா..? வழக்கம் போல, வேலு மாமாவிடம் புலம்பித்தள்ளினேன், மீண்டும் கடன், என் கனவுகள் தள்ளிப்போனது. இடையே சூப்பர்வைசராக பதவி உயர்வு. ஆண்டுகள் உருண்டோடின…

அம்மா, அழைத்திருந்தார்…தனக்கு வயதாகி விட்டதால் எனக்குத் திருமணம் செய்து பார்க்கணும் என்றாள். அவர் சுயநலப் பேச்சை விட அவர் முடிவு என்னை சந்தோஷப் படுத்தியது…எத்தனை கிண்டல்கள், கேலிகள்! உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது என்ற எக்கலிப்பு..! எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளியாய் என் மனைவி வந்தாள். சூழ்நிலை காரணமாக காத்திருந்தாலும், தவமாய் தவமிருந்து கிடைக்கப்பெற்றது போல ஒரு பெண்டாட்டி! அன்பு, அடக்கம், மதிப்பு, மரியாதை ஒரு வார்த்தை அதிர்ந்து பேசாத குணம்..விடுமுறையின் மதிப்பு தெரிந்ததே இந்த முறை தான்…

பயண நாள் வந்தது. ஆண்கள் அழக்கூடாது தான் ஆனால் என்னால் அடக்க இயலவில்லை!என் மனைவியும் வாடிப்போனால். ஆனால் அழவில்லை , அழுகையை அழுது வடிப்பதை விட அடக்கி வைப்பது மிகக்கொடுமையானது, எனக்காக அவள் அதை செய்தாள்.. என்னுள் பெருமிதம் ! எனக்காக, எனக்காக மட்டுமே எதையும் செய்ய, என்னை மட்டும் நினைக்க ஒரு ஜீவன் கிடைத்துவிட்டது. அன்று விமானக் கழிவறையில் அதிக நேரம் செலவிட்டேன், அழுவதற்கு..!

துபாய் வந்திறங்கினேன்.. நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள், வேலு மாமா அன்பாய் அணைத்துக் கொண்டார், நாள் போக்கில் சரியாகுமென்றார்.மாதம் ஒருமுறை ஊருக்கு பேசும் தொலைபேசி மணிக்கொருமுறையாக மாறியது. என் மனைவி படும் வேதனையை என் அக்காமார்கள் விவரிக்க மனதில் வேதனை இன்னும் அதிக மாகியது. இலக்கியத்தில் பெண்களுக்கு வந்த பசலை நோய் இப்போது எனக்கு வந்தது, முன்பெல்லாம் வருடங்கள் உருண்டோடின இப்போது நாட்களே நகர ஆரம்பித்தன..

இந்த வேதனை இடையே அன்று அலுவலகத்திலிருந்து உற்சாக பானமாய் ஒரு செய்தி. எனக்கு ஃபேமுலி ஸ்டேட்டஸ் வழங்கப்பட்டதாய் ..! காற்றில் பறந்தேன், சந்தோஷ மிகுதியில் சொன்னவரைக் கட்டிக்கொண்டேன், அவர் என் மேலாளர் என்பதை மறந்து…

அறைக்கு வந்தேன் பார்ட்டி கொடுத்தேன் அன்று வேலு மாமாவின் நகைச்சுவையில் பார்ட்டியே களைகட்டியது…

சொந்ததில் உள்ள சில பொறாமை கோஷ்டிகள், "ரஹீமு பொண்டாட்டியை வெளிநாட்டுக்கு எடுக்க போறானாமே.. அங்கே செலவில்லாம் பிச்சுக்கிட்டு போகுமே… "என்று போகிற போக்கில் பத்த வைத்து விட்டுச் செல்ல, கலவரமான அம்மா அக்கா எல்லோரையும் சமாதானபடுத்தி என்னவளை துபாய்க்கு எடுக்க நாள் குறித்து விட்டேன். விடிந்தவுடன் விசா எடுக்க இமிகிரேசன் போகிறேன். குர்ர்ர்ர்ர்’ என்றபடி சற்றே அதிகமாகிய ஏசி சத்தத்தில் நிகழ்காலம் வந்தேன்… மீண்டும் புரண்டு படுத்தேன்…பக்கத்தில் வேலுமாமா முழித்தபடி என்னை பார்த்துக் கொண்டிருந்தார்.

என்ன ரஹீம், நீ இன்னும் தூங்கலையா…?

புன்னகைத்தேன், “ இல்லை மாமா தூக்கம் வரலை”

“மக வரப்போகுதுல்ல அது தான் மருமகனுக்கு குளிரடிக்குது, தூங்கு ரஹீம் நாளைக்கு வேலைக்கு போகனும்”

இல்லை மாமா, “நாளைக்கு நான் வேளைக்கு போகலே..” என்றேன்

“ஏன் ? என்ன ஆச்சு..?” பதறினார்

“விசா எடுக்கப் போறேன், அப்புறம் வீட்டுக்கு 6 மாசம் அட்வான்ஸ் கேக்குறாங்க, கையிலே இருக்கிற அரியர்ஸ் பணத்தை கொடுக்கப் போறேன், டிக்கட்டுக்கு இனி தான் தேத்தணும்..”

வீட்டு சாமானுக்கு என்ன பண்ணப் போறே? அக்கறையுடன் கேட்டார்

கிரிடிட் கார்டு தான்..” நான்

"பேலன்ஸ் இருக்கா…?"

"ஏதோ இருக்கு மாமா” என்றேன்

"புள்ளை வரும் போது வெறும் கையோடவா இருப்பே ? இந்த மாசம் ஒரு (கிரிடிட் )கார்டை கட்டி குளோஸ் பண்ணிடலாம்ன்னு கொஞ்சம் பணம் சேத்து வச்சிருக்கேன் அதை எடுத்துக்கோ.."

"வேண்டாம் மாமா , உங்க கிட்டே எத்தனை தடவை தான் வாங்குறது.. அதுவும் அந்த கார்டை முடிக்கனுங்கறது உங்க ரொம்ப கால ஆசையாச்சே..?"

"அட விட்டுத்தள்ளு ரஹீம் இந்த சனியன் வாலை புடிச்சா என்னாகும்னு நமக்குத் தெரியாதா என்ன..?, எனக்கென்ன .. ஒரே மகள், அவ கல்யாணத்தை பண்ணிட்டா பெரிய கடன் முடிஞ்சிடும் இதுவெல்லாம் சும்ம…"

வேலு மாமா பிக்கப் டிரைவராக இருக்கிறார்.. எங்கள் அறையின் மூத்த குடிமகன்.. எப்போதும் கலகலப்பாய் இருப்பவர்,, அவரின் உதவி செய்யும் குணமறிந்து ஏமாற்றிச் சென்றோர் ஏராளம். சிந்தித்த படி உறங்கி போனேன்.

சீக்கிரமே விடிந்துவிட்டது. இமிக்ரேஷன் சென்றேன், சில மணி நேரத்தில் விசா ரெடி. கண்களில் கண்ணீர்.., இல்லை கண்ணீர் வந்தது… இது ஆனந்த கண்ணீர்..! இனி பணத்தை வீட்டுக்காரரிடம் கொடுத்து விட்டால் வீடும் ரெடி…இரண்டு நாளில் என்னவள் என் அருகில் !போன் செய்ய ஆவல் எழுந்தது.. வீட்டு வேலையையும் முடித்து விட்டு போன் செய்யலாம் என்று அறைக்கு விரைந்தேன்.வாசலில் வேலு மாமாவின் பிக்கப் நின்றது, ஏன் என்ன ஆயிற்று இவருக்கு ஏன் வேலைக்கு போகவில்லை ..? என்று யோசித்த படி உள்ளே நுழைந்தேன்.

வேலு மாமா பதற்றத்துடன் போனில் பேசிக்கொண்டிருந்தார், ஓகே ஓகே , நான் எப்படியாவது அனுப்பறேன்… போனை வைத்து விட்டு என்னிடம் வந்தார்…அவரிடம் என்று மில்லாமல் பதட்டம் காணப்பட்டது,

ரஹீம் என் மகளுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம், ரொம்ப சீரியஸ்ஸாம் ஆபரேசன் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டாராம், வேலு மாமா கதறி அழத்தொடங்கினார்…சிரித்து, சிரிக்க வைத்தே பார்த்து பழக்கப்பட்ட மாமா அழுதது மனதை பிழிந்தது…கண்ணில் நீரை வரவழைத்தது… உடனே ஆபரேசன் பண்ணச்சொல்ல வேண்டியது தானே மாமா…?
“ ஆபரேஷனுக்கு இரண்டு லட்சம் வேணுமாம் ரஹீம், உடனே அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன்…

நான் கொஞ்சமும் யோசிக்க வில்லை. என்னிட மிருந்த பணத்தை அப்படியே அவரிடம் கொடுத்தேன், யோசிக்காதீங்க மாமா, உடனே இந்த பணத்தை அனுப்புங்க, தேவை பட்டா நீங்களும் கிளம்புங்க…மீதி பணத்தை நான் ஏற்பாடு பண்ணி அனுப்பறேன்…”

"ரஹீம் !!?" அவர் உறைந்தார்…வேணாம் ரஹீம் இது உன் சந்தோசத்தின் சாவி… இது வேணாம்டா”

“பரவாயில்லை மாமா, ஐந்து அக்காக்களுக்காக என் வாழ்வை பெரும்பாலும் கழிச்சுட்டேன், இது என் தங்கச்சிக்கு செய்றதா நினைச்சுக்குறேன், கிளம்புங்க மாமா”

வேலு மாமா என் கையை இறுகப் பற்றினார். அந்த அழுத்தத்தில் பாசத்தின் வலிமை தெரிந்தது.அவர் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார். நான் ஏசியை போட்டு விட்டு கட்டிலில் அமர்ந்தேன்… கையிலிருந்த விசாவை உற்றுப்பார்த்தேன்… கசக்கி வீசினேன்..

டெலிபோன் மணி ஒலித்தது. மறுமுனையில் என்னவள் “ மச்சான் இன்னிக்கு விசா எடுக்க போனீங்களே என்னாச்சி , அஜீசு சாச்சா எப்ப டிக்கெட் போடன்னு கேட்டாங்க, உங்களை சீக்கிரம் பார்க்க போறென்ன்னு கை கால் ஓட வில்லை…நீங்க லட்டெர்லே அனுப்புன முத்தத்தை எல்லாம்கணக்கெழுதி வச்சிருக்கேன், அங்கே வந்ததும் மச்சானுக்கு டபுளா தருவதற்கு” என்றுமில்லாமல் இன்று அவள் ஆசைகளை அடுக்கிக்கொண்டே போக,

நான் சிறகொடிந்த பறவையாய் சிலையானேன்.

(முற்றும்)

சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகள்-1

(தன் குடும்ப வாழ்வை வளப்படுத்த கடல் கடந்து வந்து,இந்த எண்ணெய் தேசத்தில் தங்கள் இளமையைத் தொலைத்து நிற்கும் ஆயிரக்கணக்கான மெழுகுத்திரிகளுக்கு இந்த படைப்பைக் காணிக்கையாக்குகிறேன்)



எனக்கு உறக்கம் வரவில்லை... புரண்டு படுத்தேன்...மீண்டும் புரண்டு படுத்தேன் கடிகாரத்தை இருபதாவது முறை பார்த்தேன், மணி நள்ளிரவு 2.30 நண்பர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். மெல்லிய குறட்டை சத்தம் விதவிதமாக....இவற்றை மிஞ்சும் ஏ.சி. சத்தம் ஒருபுறமாக....மீண்டும் புரண்டு படுத்தேன். உறக்கம் வரவில்லை.அறையின் இருட்டு கண்களுக்கு பழகிவிட்டிருக்க, சிந்தனையுடன் என் அறையைக் கண்களால் துழாவினேன்.அது 150 சதுர அடி புறாக்கூடு, பத்துபேரின் பங்களா இது ! ஊரில் இவர்களுக்காக பங்களாஉம் பகட்டு வாழ்க்கையும் காத்திருக்க, இங்கே கனவுகளைச் சுமந்து காகிதத்தில் அழுது, ஆசைகளை தபாலில் அனுப்பும் துர்பக்கியசாலிகள் இவர்கள்… நான்…? நீண்ட பெருமூச்சுடன் காரை பெயர்ந்த கூரையை உற்று நோக்கினேன். தூரத்தில் ஆம்புலன்ஸ் சைரன் ஒலி, அதன் சத்ததிற்கேற்ப எனை 18 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச்சென்றது.

நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த பொக்கிஷம். ஐந்து பெண் குழந்தைகளுக்குப் பின் தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே ஆண்மகன். வீட்டின் செல்லப்பிள்ளை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று தான் என் பள்ளிப்பருவமும் நகர்ந்தது, அப்போது நான் பத்தாவது படித்துக் கொண்ற்றுந்தேன்.வழக்கமாக் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பினேன்.எனக்குத் தெரியாது என் வாழ்வில் அன்று ஒரு சுனாமி நிகழும் என்று..! வீடு சென்றேன், அங்கே அஜீஸ் மாமா வந்திருந்தார். அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“மச்சான், நான் சொல்லுறதை கேளுங்க, உங்களுக்கும் வயசாகிப்போச்சி, ஐந்து பெண்ணுக்கும் கல்யாண வயசு ஆயிருச்சி, இவன் படிச்சி என்ன பண்ணப் போறான்..? நம்ம ஆசிஃப் அண்ணன் துபாயிலே இருக்காரு, ஊருலே பாருங்க அவர் வசதியை, அவர் என்ன ஐஏஸ்ஸா படிச்சாரு..? வெறும் அஞ்சாவது தான் படிச்சிருக்காரு, இப்ப அவரு ஊருக்கு வந்துருக்காரு, அவருக்கு வேலைக்கு சிலபேர் வேணுமாம், நீங்க ஊம் னு ஒரு வார்த்தை சொல்லுங்க, நம்ம ரஹீமை துபைக்கு அனுப்புறது என் பொறுப்பு.”

அப்பா யோசிச்சார், எனக்கு ஆத்திரம் வந்தது, துபாய் வாழ்க்கை நமக்கு கிடைக்க மாமா எவ்வளவு மெனக்கெடுறாரு, இவரு ஏன் யோசிக்கிறாரு..? உள்ளுக்குள் பொருமியபடி சமையல் அறையிலிருந்த அம்மாவிடம் அதைக்கொட்டினேன்.

“ டேய் ரஹீமு என்னை என்னடா பண்ணச் சொல்றே ...? அப்பா எது பண்ணினாலும் உன் நல்லதுக்குத்தான் பண்ணுவாரு…”

அப்பா ஆரம்பித்தார், “அஜீசு, நாம தான் படிக்காமப் போயிட்டோம், ரஹீமாவது நம்ம குடும்பத்துலே படிச்சு பெரிய ஆளா வரட்டும். நான் ஐந்து பெண்களைப் பெற்றதுக்கு அவன் என்னடா செய்வான் ? அவன் தலையிலே சுமையை வைக்க நான் விரும்பவில்லை. இந்தப் பேச்சை இத்தோடு விட்டுவிடு, நான் நம்ம இஞ்சினியர் மாதிரி ரஹீமை பெரிய இஞ்சினியருக்கு படிக்க வைக்க போகிறேன்”.

“ மச்சான் உங்க ஆசை வாஸ்த்துவம் தான், ஆனா வயசுக்கு வந்த பொண்ணுங்க ஐந்து இருக்குங்கிறதை மறந்துடாதீங்க..பொண்ணுங்க கல்யாணத்தை பார்ப்பிங்களா…இல்லை அவன் படிப்பை பார்ப்பீங்களா..?

அப்பா விடுவதாய் இல்லை, “அஜீசு படைத்த அரிசியிலேயே யார் யாருக்கு எது என்று எழுதிவைத்த ஆண்டவன், என் பிள்ளைகளுக்கு வழி காட்ட மாட்டானா ? இதோட இந்த பேச்சை விடு” அப்பா குரலில் சற்று கடுமை கலந்திருந்தது, அஜீஸ் மாமா போய் விட்டார்…
எனக்கு ஆத்திரம் அதிகமானது, ஆத்திரத்தில் உறங்கிப்போனேன்…திடீரென்று அம்மாவின் அலறலில் பதறி எழுந்தேன், அக்காமார்களும் ஓடி வந்தார்கள், அம்மா கதறியபடி இருந்தார்… அப்பா கட்டையாக கிடந்தார்,அப்பா, அப்பா என்று நாங்கள் துடித்தோம், அவர் மூச்சு அடங்கி இருந்தது

பாழாய்ப்போன மாரடைப்பு என் அப்பாவை எங்களிடமிருந்து பிரித்தது, நாங்கள் ஒரே நாளில் நிர்கதியானோம், அஜீஸ் மாமா வந்தார், பாஸ்போர்ட், விசா எல்லாம் மூன்று மாதங்களில் தயார், என் அப்பாவின் இஞ்சினியரிங் கனவு , அவருடன் மறைந்தது…

நான் துபாயிக்கு வந்திறங்கினன், என் போன்று ஏராளமானோர் இருந்தார்கள், அது ஒரு லேபர் கேம்ப், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை, ஒவ்வொரு பொறுப்பு, பறந்து வந்த பின்புதான் புரிந்தது, நாங்கள் சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகளென்று…

மாமா, சாச்சா என்று இங்கு உறவிகள் அதிகம். இது சந்தோஷத்தில் சங்கமித்த கூட்டமல்ல, சோகத்தில் இணைந்த உறவு! வேலைக்குச்சென்றேன், ரோடு போடும் கம்பெனியில் வேலை. பாலைவன நடுவில் பணி.ஊர் வெயிலில் வெளியே சென்றாலே கறுத்து விடுவாய் எனக்கருணை காட்டும் அம்மா இங்கு பார்த்தால் ? சமையலறைக்குள் நுழைந்தாலே சூடு தாங்க மாட்டாய் போ தம்பி போ தம்பி எனப் பதறும் அக்காமார்கள் இங்கு வெயிலில் வேகும் என்னைப் பார்த்தால் ? அவர்கள் சந்தோஷம் காக்க என் சங்கடம் மறைத்தேன்.

இங்கு செருப்பாய் தேய்தபோதும் சேக் உடையில் புகைப்படம் அனுப்பினேன்,இங்கு கதறி அழுதபோதும் காருடன் நின்று படம் அனுப்பினேன். வேதனை மறைத்தேன் வெந்த புண் மறைத்தேன்..இரவில் நண்பர்களின் சோகக்கதை கேட்ட போது வேதனை மறந்தேன், வெந்த புண் மறந்தேன்…சம்பாதித்த பணத்தை அப்படியே அனுப்பினேன், பணம் போத வில்லை என்று மடல்…என் கஷ்டம் மறைத்தது எனக்கே கஷ்டமாய் போய் விட்டது.அப்பா கொடுத்த ஐநூறு ருபாயில் காலம் தள்ளியவர்கள், நான் அனுப்பும் ஐயாயிரம் ரூபாய் காணாதென்றார்கள், கேட்டால் சம்பாதிக்கிறேன் என்று கேள்வி கேட்கிறாயா? என்று அம்மா அழுவாள்…எதற்காக இந்த கஷ்டம் ..? அவர்களுக்காகத்தானே…? பின்னே அவர்களை அழவைக்கலாமா..? அதன் பின் அவர்கள் கேட்ட அனைத்தையும் அனுப்பினேன். முதல் அக்காவிற்கு வரன் வந்தது…கடன் பட்டு கல்யாணம் நடத்தினேன். வருடங்கள் கடந்தன…



வேலையில் என் திறன் பார்த்து புரொமோஷன் வந்தது. லேபரில் இருந்து ஸ்டாஃப் ஆனேன்.பெருமை என்னைப்பற்றிக்கொண்டது. கிரீடம் சூட்டப்பட்டதாக மகிழ்ந்தேன். அப்போது எனக்குத்தெரியவில்லை எனக்கு உயர்த்த்ப்பட்ட சம்பளத்தை விட என் செலவு இரட்டிப்பு ஆகுமென்று… ஆம், கேம்பிலிருந்து வில்லாவிற்கு மாறினேன்.முன்பு போல ஒரு ஜோடி துணிகளை வைத்து வாரம் முழுவதும் கடத்த இயலவில்லை. என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு ஏற்ப என்னை அலங்கரித்துக்கொள்ள வேண்டிய சூழல் செண்டு, புது உடைகள், ஷஊ, ஹோட்டல் சாப்பாடு என்று என் வாழ்க்கை முறையில் அதிரடி மாற்றம் என்னைத் தடுமாற வைத்தது. கேம்பில் இருக்கும் போது பெப்ஸி குடிக்கவே நூறு முறை யோசித்த நான் இப்போது பீர் குடிப்பதை பெருமை என்று நினைக்க ஆரம்பித்தேன்.

அடுத்த அக்காவின் திருமணம் … துபாய் வந்து வருடங்கள் பலவாகியதால், ஊர் செல்ல வேண்டிய தருணமும் வந்தது.தெரிந்தவர்கள் எல்லோரிடமும் கடன் … ஊர் சென்றேன், ராஜ மரியாதை… பணம் கரைந்தது, மரியாதையும் கரைந்தது, மீண்டும் பாலை நகரம் நோக்கிப் பயணம். மீண்டும் பத்து வருடம் ஊர் செல்வதை மறந்து உழைத்தேன், உழைத்து, உழைத்து ஒட்டகமானேன். அக்கா அனைவருக்கும் திருமணம் முடிந்தது. சுமைகளை இறக்கி வைத்த பின்னும் கூனல் குறையவில்லை. அடுத்து உனக்குத்தான் திருமணம் என்று நண்பர்கள் கேலி செய்ய ஆரம்பித்தார்கள். முதன் முறையாக என்னைபற்றி கனவு காண ஆரம்பித்தேன். அன்று அம்மா டெலிப்போனில் அழைத்திருந்தார். வழக்கமாக நான் தான் அழைப்பேன், அவர் அழைத்திருக்கிறார் என்றால் எதோ முக்கியச்செய்தி தான். என்னவாக இருக்கும்..? ஒருவேளை பொண்ணு பார்த்து வைத்திருப்பார்களோ..? என்ன சொல்வது ஒத்துக்கொள்ளலாமா..? இல்லை பிடிக்காததை போல் நடிக்காலாமா? என்று சிந்தித்த படி “அம்மா” என்றேன்…

பதில் சுகமா..? சோகமா?

தொடரும்….

Related Posts with Thumbnails