வேட்டைக்காரனுக்கு இந்தப்படம் போட்டியா…? காணொளியுடன்…

"அண்ணாச்சி இந்த சுற்றுலாவை படமா எடுக்கலாமென்று இருக்கிறேன்"
என்று சொன்ன போது அண்ணாச்சி சிரிச்ச சிரிப்பை மறக்கவே முடியாது…அப்படி ஒரு சிரிப்பு…


“ஏண்டே அந்த சினிமாக்காரனுங்க தான் இப்படி எதாவது சொல்லிக்கிட்டு இருங்கானுங்கன்ன உனக்கு என்னங்கடே வந்தது…” என்று சொல்லி சிரிச்சுக்கிட்டே இருந்தாரு

அன்றைக்கு என் வாழ்க்கையிலே சில முக்கியமான முடிவுகளை எடுத்தேன்…
1)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சி என்னைக்கும் சிரிச்சுக்கிட்டே இருக்கனும்…( இன்னா செய்தாரை ஒருத்தர் பாணியில்)
2)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சியைப் பார்த்து ஊரே சிரிக்கனும்
3)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சி ஊரைப்பார்த்து சிரிக்கனும்..

அதற்குப் பின்னால் “வெற்றி நிச்சயம்” என்ற பாடல் பிண்ணனியில் ஓட ஒரே பாடலில் ஒரு படத்தை முடித்து அண்ணாச்சி கிட்டேயே போட்டு காட்டினேன்…படத்தை பார்த்துட்டு கண் கலங்கிட்டாரு…
“ராஸா நீ கோடம்பாக்கத்துலே இருந்து எங்களை கொல்ல வேண்டியவண்டா...இவ்வளவு சீரிசா படத்தை எடுத்திருக்கேயடா"

என்றதும் தூக்கி வாரிப்போட்டது…அண்ணாச்சி என்னையே வச்சி காமெடி கீமடி பண்ணலேயேன்னு இது காமெடி படம் அண்ணாச்சி என்றேன் இருந்தாலும் அழுறதை நிறுத்தலே…

அதன் பின் அண்ணாச்சி என் அன்பு அண்ணன், அமீரகப் பதிவுலத் தந்தை , கட்ட(ட)த்துரை ( ஆர்க்கிடெக்ட்டுக்கு தாங்க நம்ம பசங்க அன்பா இப்படி ஒரு பேரை வச்சிருக்கானுங்க) எனக்கு கொடுத்த ஊக்கத்தை மறக்கவே இயலாது…



அதன் பின் ட்ரைலர் பண்ணாலாமென்று அவர் தான் ஊக்கமும் கொடுத்தார்…அந்த ஊக்கத்தின் பலன் தான் இந்த ட்ரைலர் பதிவு…
இதனால் விஜய் ரசிகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இது கண்டிப்பாக வேட்டைக்காரனுக்கு போட்டி அல்ல…

இந்தப்பட ஒளிப்பதிவில் என்னுடன் இணைந்து செயல் பட்ட நண்பன் முகவை முகில், ஊமையன் ஹக்கிம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் பதிவர்ச் சுற்றுலாவிற்கு வர இயலா விட்டாலும் இந்த ட்ரைலர் வெளியீட்டிற்கு போஸ்டர் வடிவமைத்து தந்த "பிரபல சினிமா போஸ்ட்டர் வடிவமைப்பாளர் சிம்ம பாரதிக்கு" என் அன்பு கலந்த நன்றி

இந்த வெளியீட்டிலும், சுற்றுலாவிலும் எந்த வித குறிக்கீடும் இல்லாமல் செயல் பட்டதற்கு (கலந்து கொள்ளாததற்கு) பி.ப.குசும்பனுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி… …

என்ன தான் அண்ணாச்சியை திட்டினாலும் "நல்லா இருங்கடே"ன்னு எல்லா உதவியும் வழங்கிக் கொண்டிருக்கும் அன்பு மிகு அண்ணாச்சிக்கு
நன்றி! நன்றி! நன்றி!

ட்ரைலரை இப்பப் பாருங்க… படம் டிசம்பர் 18….சார்ஜாவைத்தொடர்ந்து உலகெங்கும்...
மேலும் விபரங்களுக்கு….
http://asifmeeran.blogspot.com/2009/12/blog-post.html

விடை தெரியாத பள்ளிப் பருவக் காதல்..!

விடை தெரியா வினா...!?


“எனக்கு நீ யார்...?”
பள்ளி இறுதி நாளில்
உன்னை நான் கேட்டேன்
விடையென்று நீ உதிர்த்துச்
சென்ற உன் உதட்டுப்
புன்னகை இன்னும்
விடை தெரியாமல்
என்னுள்
புதைந்து கிடைக்கிறது…

என் கேள்விகள்
எத்தனைப்பக்கங்களானாலும்
உன் பதில் என்னவோ
மௌனம் கலந்த ஒரு
புன்னகை தான்...
அத்தனை கேள்விகளும் உன்
ஒரு அங்குல புன்னகை
முன் மண்டியிடும் மர்மமென்ன...?

எத்தனையோ முறை
நீ கேட்டு விடுவாயோ என்று
பக்க பக்கமாக
பதில் தயாரித்து வருவேன்
அத்தனை முறையும
நீ என் பெயரைக் கேட்டால் கூட
விடை தெரியாமல்
விழிப்பேன்…
உன் பார்வை என்னும்
காந்த அலையில்
என் மூளை நரம்புகள்
முடக்கப்படுவது
இயற்கை தானே...?

கோனார் தமிழ்
உரை போல
காதலுக்கும் ஒரு
வழி காட்டியிருதிருந்தால்
அதுவாவது என் காதலுக்கு
ஒளி காட்டியாக
இருந்திருக்கும்

கவிதை
நீ கற்றுத்தந்த பாடம்...
உன் மௌனத்தை
மொழி பெயர்த்தேன்
எல்லோரும் என்னை
கவிஞனென்றார்கள்...
உண்மையில் நானொரு
மொழிபெயர்ப்பாளன்
என்பது எனக்கு உனக்கும்
மட்டுமே தெரிந்த உண்மை...

ஒரு திருவிழாவில்
மீண்டும் நாம்
சந்தித்துக் கொண்டோம்
உன் கணவனுடன்…
என் மனைவியுடன்…
“யாரம்மா இது..?”
உன் மகள்..
அன்று விட்டுச்சென்ற
புன்னகை
உன் உதட்டை
மீண்டும் தொட்டுச்சென்றது..
ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி..
என்றாலும்
விடை கிடைத்த திருப்தியுடன்
மற்றவர்கள்...
விடை தெரியாத
வினாவுடன் நான்....

( அமீரகத்தில் வெளிவரும் "தமிழ்த்தேர்" மாத இதழுக்காக "வினாவும் விடையும்" கவிதைத் தலைப்பிற்கு எழுதப்பட்ட கவிதை இது.)

அமீரகப் பதிவர்ச் சுற்றுலா…அழைக்கிறார் அண்ணாச்சி…


இடம் : அமீரகத்தின் 7 நாடுகளில் ஒன்றான புஜராவின் கடற்கரை நகரம் குர்பகான். ( மலையும் கடலைச்சார்ந்த மணல் பகுதி பகுதியும் குறிஞ்சி+நெய்தல்+பாலை).

நாள் : 06-11-09 வெள்ளிக்கிழமை

நேரம் : அதிகாலை 9 மணியளவில் ( விடுமுறை நாளில் இது அதிகாலை தான்)

அனுமதி: முதல் பதிவு செய்யும் 32 உலகப் பதிவர்கள் மட்டும் ( ஓட்டுநர் இந்த சுற்றுலா முடிந்ததும் பதிவர் ஆகி விடுவார்)

தலைமை : உயர்திரு அண்ணாச்சி அவர்கள்

உணவு: பொட்டலம் தயாராகி வருகிறது

நிகழ்ச்சி நிரல் :

அதிகாலை 9 மணி - பர்துபாய்

9:15 மணி - தேரா

9:45 மணி – சார்ஜா

10:00 மணி

பாட்டுக்குப் பாட்டு
கவுஜைக்கு கவுஜை
பதிவர் 2010 ( பதிவுலகில் சிறந்த பதிவுத் தேடல்)
அண்ணாச்சி நடத்தும் நீயா நானா…?
அண்ணாச்சியின் ஜாக்பாட் கேள்வி பதில் நிகழ்ச்சி
(அண்ணாச்சி கிட்டே யாராவது பிக்பாக்கெட் அடிக்காமல் இருக்கனும்)
அண்ணாச்சியின் அரட்டை அரங்கம்
( அதை யாரும் குறட்டை அரங்கமா மாத்திடக் கூடாது ஆமா)
சென்ஷியின் நானும் பிரபலம் தான் ( பேப்பர் ஒர்க்காம்)

12:30 மணி
ஜும்மா தொழுகை நேரம்

1:30 மணி

ராட் மாதவனுக்கு மொட்டை போடுதல்
( அண்ணன் புஜ்ராவில் தான் இருக்காரு, அவங்க ஆபிஸ்லே ஒரு டீன்னு பெர்மிசன் வாங்கிருக்காரு…(வடிவேலுவின் பாசக்காரப் பசங்க விட்டுடு சாப்பிட மாட்டீங்களடா காமெடி இவர் மூலம் புஜ்ராவில் நடக்கப் போகுது)


3:00 மணி

10க்கு 10 கிரிக்கெட்டு….
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அசத்தப்போவது யாரு…?

7:00 மணி
மீண்டும் பாட்டுக்கு பாட்டு………….

இரவு சாப்பாடு அவரவர் வீட்டில்…..


அமீரகத் தங்கம், சாத்தான்குளச் சிங்கம் அண்ணாச்சி அழைக்கிறார்….
http://asifmeeran.blogspot.com/2009/11/blog-post.html

வாருங்கள் பதிவர்களே…
பேருந்தில் இடம் பிடியுங்கள்…! வரலாற்றில் தடம் பதியுங்கள்..!


தொடர்புக்கு…

ஆசிப் மீரான் 050 655 02 45
கீழை ராஸா 050 418 42 45
சென்ஷி 050 314 60 41

பெண்கள் வயசுக்கு வந்தா படிக்கக் கூடாதா...?

இஸ்லாமிய சமுதாயத்தில் "பெண் வயசுக்கு வருதல்" எனும் இயற்கை நிகழ்வை காரணம் காட்டி சமூகத்தில் நசுக்கப்படும், பெண்கல்வி, பெண் முன்னேற்றம், போன்ற செயல்களைச் சாடும் சிறுகதை இது.

கதை எங்கள் ஊர் வட்டார மொழியில் கதை பின்னப்பட்டுள்ளதால் அதற்கான அருஞ்சொற்பொருளை கதையின் அடியில் கொடுத்துள்ளேன்.


(சிறுகதை எழுத்தாளர் நண்பர் திருச்சி சையதுவால் தொகுக்கப் படவிருக்கும் இஸ்லாமிய சிறுகதை தொகுப்பிற்கு அளிக்கப்பட்ட சிறுகதை இது. )
பெரிய மனுசி
“ஆயிஷா இனி ஸ்கூலுக்கு வராதாம்” சக நண்பனின் வார்த்தைகள் என்னுள் சாட்டையடியாகப் பதிந்தன.

“ ஏண்டா” பதற்றம் என்னுள்

“அது பெரிய மனுசி ஆயிடுச்சாம்”

'அது எப்படி நானும் அவளும் ஒண்ணாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப்படிக்கிறோம், நான் பெரிய மனுசனாகலை அது மட்டும் எப்படி,,,?' விடை தெரியாத கேள்விகள் என்னுள் முட்டி மோத அன்று இரவு என்றும் இல்லாத அளவு ஆயிசாவின் நினைவு என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது..


ஆயிசா என் முதல் பள்ளித்தோழி…பள்ளி செல்லும் வழியில் என்னுடன் பயணப்படுபவள்…என்னை விட உயரம், தெத்துப்பல் சிரிப்பு, நல்ல அறிவாளி முதல் மதிப்பெண்ணைத் தட்டிச்செல்ல எங்களுக்குள் ஒவ்வொரு பரீட்சைக்கும் போட்டா போட்டி இருந்தாலும்,,,நட்பில் எங்கள் நெருக்கம் கண்டு பள்ளியே வியந்து நிற்கும்…


அடுத்த நாள் பள்ளிக்குச் சென்ற போது நண்பன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது…அவன் சொன்னது பொய்யாக இருக்க கூடாதா என்று மனசு ஏங்கியது. நடந்து செல்லும் தூரத்தில் பள்ளி என்பதாலும்,அன்று மாட்டு வண்டிப்பயணம் கூட வசதியானவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதாலும் என் பள்ளிப்பயணம் முழுவதும் நடை பயணமே…எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது முடுக்கை* கடக்கும் போது கடலில் கலக்கவரும் நதி போல் எனக்காக காத்திருப்பாள்.இன்று அந்த இடத்தில் வெறுமை…முடுக்கின் வழியே அவள் வீட்டை எட்டிபார்த்தேன்.ஆயிசாவின் லாத்தா* நின்றிருநதார்கள்.அவரிடமே கேட்டுவிடுவது என்று அருகில் சென்றேன்.

“ரியாஸ், என்ன ஸ்கூலுக்கு கிளம்பியாச்சா…”

“ஆமாம் லாத்தா அது தான் ஆயிசாவை கூட்டி போகலாம்னு வந்தேன்…என்றேன் தயங்கியபடி…

என் சத்தத்தைக் கேட்டு ஆயிசாவின் உம்மாவும் வெளியே வந்தார்…
நான் சலாத்தி* வழியே ஆயிசா தெரிகிறாளா என்று ஊடுருவி பார்க்க முயன்றேன்…அவள் தென்பட வில்லை…

“இனி ஆயிசா ஸ்கூலுக்கு வராது வாப்பா..” ஆயிசாவின் உம்மா.

“ஏன்” இனம் புரியாத ஏக்கத்துடன் நான்.

“அவ பெரிய மனுசி ஆயிட்டா..” ஆயிசா உம்மா முற்றுப்புள்ளி வைத்தார்கள்
ஏமாற்றத்துடன் பள்ளி நோக்கி நடந்தேன்..



‘அவ பெரிய மனுசி ஆயிட்டாளாம் ஸ்கூலுக்கு வரமாட்டாளாம் இது எப்படி பதிலாகும்…போன வாரம் வகுப்பில் லீலா டீச்சர் , பெரிய ஆளா வரனும்னா நல்லா படிக்கணும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. ஆயிசா நல்லா படிச்சதுனாலே பெரிய மனுசி ஆயிட்டாளா..?’ வகுப்பில் அவள் ஞாபகம் இருமடங்கானது.

நேற்றுவரை என் கூடவே இருந்தவள் இன்று அவள் வீடு செல்லும் போது கூட நம்மைப்பார்க்க வரலையே…குழப்பம் தொடர்ந்தது…

இரவு சாப்பிடும் போது உம்மாவிடம் கேட்டேன்…
“ உம்மா நான் பெரிய மனுசனாயிட்டா என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டியா…? “

“நீ நல்லா படிச்சா தாண்டா பெரிய மனுசனாவே” டீச்சர் சொன்ன அதே வார்த்தை..”

“அப்ப ஏன் ஆயிசா பெரிய மனுசியாயிட்டான்னு ஸ்கூலுக்கு விட மாட்டேன்றாங்க”

“அவ பொம்பளப்புள்ளடா”

“அது என்ன பொம்பளபுள்ளைக்கு ஒண்ணு ஆம்பளை புள்ளைக்கு ஒண்ணு…”

“கெப்பர்தனமா* பேசாமே போய் தூங்குடா..” அம்மா குரலில் சற்று கடுமை.

அன்று விடை தெரியாத வினாக்களுடன் உறங்கிப்போனேன்.

வருடங்கள் உருண்டோடின…நான் படித்து டாக்டராகி எங்கள் ஊரிலேயே கிளினிக் ஆரம்பித்ததென்று என் வாழ்வில் பல அத்தியாயங்களுக்குப் பின் ஆயிசாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அன்று அஸர்* தொழுகையை முடித்து விட்டு வீடு வந்த போது வரண்டாவில் ஒரு பொண்ணுடன் உம்மா பேசிக்கொண்டிருந்தார்கள், அவள் கையில் எட்டு வயசு மதிக்கத்தக்க ஒரு சிறுமி காய்ச்சலில் நடுங்கிய படி…நான் பெரும்பாலும் வீட்டில் வைத்து நோயாளிகளைப் பார்ப்பதில்லை..யார் இவர்கள் என்று எண்ணிய படி வந்த என்னைப்பார்த்த உம்மா…

“ரியாஸ் வாப்பா இது யாரென்று தெரியுதா…பதிலுக்கு காத்திருக்காமல் பதிலையும் சொன்னார், இது நம்ம ஆயிசாடா…அது புள்ளைக்கு ரொம்ப முடியலைன்னு உன்னை பார்க்க வந்திருக்கு…”

“ஆயிசாவா”…எத்தனை வருடங்களாயிற்று…புன்முறுவலுடன் பார்த்தேன்.அவளிடம் முன்பிருந்த உற்சாகமில்லை…அடையாளமும் தெரியவில்லை.இருந்தாலும் அதே தெத்துப்பல் சிரிப்பு…வறுமையின் வாட்டம் அவளைச்சுற்றி தெரிந்தது.




“ எப்படிருக்கே ஆயிசா? “என்ற படி அவ மகளை பரிசோதிக்க ஆரம்பித்தேன்…

“நல்லா இருக்கேன் டாக்டர்” வார்த்தையில் மரியாதை என்னை அன்னியப்படுத்தியது.

“நீ பார்த்துக்கிட்டுயிரு ரியாஸ் வராத புள்ள வீட்டிற்கு வந்திருக்கு, நான் சாயா எடுத்துக்கிட்டு வர்றேன்” என்று கூறிய படி பதிலை எதிர்பாராமல் உம்மா உள்ளே சென்றார்.

நான் ஆயிசாவை நோக்கினேன்…

“ரெண்டு நாளா காய்ச்சல், நானும் சளிக்காச்சல் என்று மருந்து கொடுத்துட்டு விட்டுடேன்.. இப்ப ரொம்ப கொதிக்க ஆரம்பிச்சிடுச்சி…ஊரெல்லாம் மலேரியா, டைபாயிடுன்னு வந்து இப்ப சிக்கன் கூனியா,பன்ணி காய்ச்சல் வேறெ பரவுதாம் பயமா இருக்கு டாக்டர்…”

“பயப்பட ஒண்ணும் இல்லே…பார்த்திடலாம்..”

ஆபிஸ் ரூமிற்கு சென்று ஸ்டெதஸ்கோப்பால் சோதித்தபடி கேட்டேன்…

“:ஏன் ஆயிசா உனக்கு என்னை ஞாபகம் இருக்கா..”

“எப்படி மறக்கும் டாக்டர்…சின்னப்புள்ளையிலே குண்டா இருப்பீங்க…நாம சேர்ந்து தானே ஸ்கூலுக்கு போவோம்…உங்களுக்கெல்லாம் ஹைஸ்கூலு, காலேஜ்ன்னு எவ்வளவோ நினைச்சி பார்க்க இருக்கும் ஆனா ஆறாவது வரை படிச்ச இந்த மக்கிற்க்கு நினைச்சிப்பார்க்க சந்தோசமான நாட்கள்ன்னா அது தானே…டாக்டர்”

“நான் டாக்டர் இல்ல ஆயிசா உனக்கு எப்பவுமே நான் “குண்டு ரியாஸ்” தான்.”

ஆச்சரியப்பார்வைப்பார்த்தாள்…”பரவாயில்லையே எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கீங்களே…”

“ஒட்டக ஆயிசா” கூட ஞாபகம் இருக்கு…

சிரித்தாள்...

உன் மாப்பிள்ளை எங்கே இருக்கார்…

சிரிப்பு மறைந்தது…

“உங்களுக்குத்தெரியாதா அவங்க எனக்கு வார்த்தை சொல்லிட்டாக *”

எனக்குத்தூக்கி வாரிப்போட்டது.

“ஏன்”

“அவங்க ரொம்ப படிச்சவங்க…அவங்களுக்கு படிக்காத இந்த மக்குக்கூட ஒத்து வரலையாம்” சொல்லும் போதே கண்ணில் நீர் கோர்த்தது…

“ஆமா வாப்பா, இந்தப்புள்ளைக்கு படிக்கிற வயசுலே கட்டிக்கொடுத்துட்டாங்க வந்தவனோ அதிமேதாவி, அது நொட்டை, இது சொத்தைன்னு எடுத்ததுக்கெல்லாம் சண்டை…இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிறா…இவ காக்கா* தான் அக்கச்சியாவை* வச்சிகாப்பாத்துறான்”
.உள்ளிருந்து வந்த உம்மா காபி ஆத்திய படி பேசிய வார்த்தைகளில் காபியின் சூடு குறைந்தது… எனக்கு சூடு ஏறியது…

சமுதாயத்தின் மீது கோபம் திரும்பியது…வயசுக்கு வந்துட்டா படிப்பை நிறுத்தும் பழக்க வழக்கம் மீது வெறுப்பு அதிகமாகியது… நல்ல படிக்க வேண்டிய ஒரு பெண்ணின் வாழ்வு என் கண் முன்னேயே கரைந்து போனதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை…

அன்று இரவு தஹஜ்ஜத்* துவாவில் சமுதாய நலனையும் சேர்த்துக்கொண்டேன்…

இரண்டு நாட்கள் கழித்து ஆயிசா மகளுடன் கிளினிக் வந்தாள்…குழந்தையின் உடல்நிலை நன்கு தேரியிருந்தது.

ஸ்டெதஸ்கோப்பை எடுத்த படி “உங்க பேரென்னா” என்றேன்.

“சபானா”


“வெரிகுட் நாக்கை நீட்டுங்க…ஆ குட்…ரொம்ப நல்ல இம்ரூமெண்ட் இனி ஒரு கவலையும் இல்லை” என்றபடி ஆயிசாவை பார்த்தேன்.

முகத்தில் புன்னகை…

“சபானா எத்தனாவது படிக்கிறீங்க”

“ஃபோர்த்…என்றவள் சிறு இடைவெளிக்குப் பிறகு

“டாக்டர் அங்கிள் நான் பெருசா ஆனதும் உங்களை மாதிரி டாக்டரா ஆவேன்” என்க,

நான் ஆயிசாவைப்பார்த்தேன் தலை குனிவாள் என்று எதிர்பார்த்தேன்…ஆச்சரியம் தலை நிமிர்ந்தாள்…நீண்ட பெருமூச்சு விட்டவள்,அழுத்தமாகச் சொன்னாள்.
“இப்பவெல்லாம் படிச்சா மட்டும் தான் பெரிய மனுசி ஆக முடியும்”

அவள் அழுத்த திருத்த உச்சரிப்பில் எனக்கு ஆயிரம் அர்த்தம் தெரிந்து.

வட்டாரத்தமிழ்
*முடுக்கு – சந்து, தெரு, *லாத்தா – அக்கா, சலாத்தி-திரை, *காக்கா –அண்ணன், *வார்த்தை சொல்லுதல் – விவாகரத்து, *கெப்பர் தனம் –அதிக பிரசங்கித்தனம், *அஸர் – மாலை வேளைத்தொழுகை ,
*தஹஜ்ஜத் – நடுநிசித்தொழுகை, *அக்கச்சியா - சகோதரி

துபாயா,அபிதாபியா,சார்ஜாவா..? அமீரக பதிவர்களின் இஃப்தார் ஓர் அலசல்...

இப்தார் முடிந்து மூன்று நாட்களாகியும் பதிவு வெளிவரவில்லை என்பதனால் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகி பதிவு "கந்தசாமி" படம் போல் கும்மப்பட்டு விடுமோ என்ற அச்சத்துடன் தான் ஆரம்பிக்கிறேன்.




இப்தார் ஆரம்பிச்சதிலிருந்து முடிந்த வரை நண்பர்கள் பக்கம் பக்கமாகப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்...இதிலே நாம என்னத்தை சொல்லபோறோம் என்று தோன்றினாலும், நண்பர்களின் சந்திப்பில் அவர்கள் அன்பில் திக்குமுக்காடி மகிழ்ந்த, நெகிழ்ந்த தருணங்களை சற்று வித்தியாசமான கோணத்தில் இந்நிகழ்வை ஒரு திரைக்கதை போல் சொன்னால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் இந்தப்பதிவு...( ஏன் இந்த கொலைவெறி..? என்று கும்ம ரெடியாவது தெரிகிறது...எதா இருந்தாலும் படிச்சிட்டு கும்முங்க...கந்தசாமி படம் போல போஸ்டர் பார்த்துட்டு கும்முன வேலையெல்லாம் இங்கே வேணா ஆமா)

ஆகஸ்ட் 28 ஆம் தேதி, 2009 ஆம் வருடம்...
நேரம் மாலை :- 5-00
கூகுளில் உலகை வலம் வந்த கேமரா...துபாய்க்குள் புகுந்து சார்ஜாவின் சாலைகளை உயர்த்திலிருந்து கடந்து அண்ணாச்சி வசிப்பிடத்தை சூம் செய்கிறது...அது மிகுந்த வாகன நெரிசல் நிறைந்த ஒரு பகுதி...அடுக்கிவைத்த பெட்டிகளைப் போன்ற அப்பார்ட்மெண்ட்கள்...பல பக்கங்களிலிருந்து புறப்பட்ட வாகனங்கள் அண்ணாச்சி வீட்டை நோக்கி சீறிப்பாய்கின்றன...


நேரம் மாலை :- 5-01
இடம் :- அண்ணாச்சி வீடு
நபர்கள் : அண்ணாச்சி, குசும்பன், சென்ஷி

குசும்பன்:- அண்ணாச்சி எப்ப பிரியாணி வரும்...?
அண்ணாச்சி:- வேணாம்...வேணாம், அழுதுடுவேன்....

சென்ஷி: அட குசும்பன் அப்படி என்ன கேட்டு விட்டானென்று இப்படி பீல் கொடுக்குறீங்க..? பிரியாணி எப்ப வரும்னு கேட்டா பதில் சொல்ல வேண்டியது தானே...?

அண்ணாச்சி: சென்ஷி உனக்கு தெரியாது...நான் இப்தாருன்னு மெயில் போட்ட அன்னைக்கே வந்து வீட்டில் டேரா அடிச்சிக்கிட்டு...இதே கேள்வியை ரெண்டு நாளா மூச்சு திணற திணற கேட்டு சாவடிக்கிறான்...

குசும்பன்:- அண்ணாச்சி எப்ப பிரியாணி வரும்...?

சென்ஷி: ஆத்தாடி...அவனா நீ..?



நேரம் மாலை :- 5-05

இடம் :- கீழை ராஸாவின் கார்
நபர்கள் : கீழை ராஸா, கிளியனூர் இஸ்மத், சிம்ம பாரதி, கவிஞர் நாசர்
கீழை ராஸா: என்ன இஸ்மத் பாய் உங்களை மூணு மணிக்கு கிளம்பச்சொன்னேன். இப்படி லேட்டா வந்தா எப்படி..?

இஸ்மத் பாய்: ஏன் ராஸா சொல்ல மாட்டே...பேமுலியை ஊருக்கு அனுப்பி விட்டு நாளொரு விழா எடுத்துக்கிட்டு இருக்கே...நானு காலையிலே 11 மணியிலிருந்து இப்தார் வர பெர்மிசன் கேட்டு மல்லுக்கட்டிட்டேன் ..ம்ம்ஹூம் அசையலையே...இப்பதான் கையிலே கால்லே விழுந்து உத்தரவு வாங்கிக்கிட்டு வர்றேன்...நீ பேசுவே ராஸா பேசுவே...


கீழை ராஸா: (மனதுக்குள்) நல்ல வேளை இஸ்மத் பாய்க்கு நாம கதை தெரியலை... இந்த இப்தார் வர, ரெண்டு நாளா போன்லே பெர்மிசன் கேட்டு போராடுற விசயம்இவருக்கு எங்கே தெரியப் போகுது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பீல் பண்ணுவதை உற்றுப்பார்த்த வாஹித்,

வாஹித்: என்ன ராஸா...அது தானே...
ராஸா : அதே தான்.... why blood...?

வாஹித் : Same Blood....( அவ்வ்வ்வ்)

(மீண்டும் பலவகையான வாகனங்கள் பல பக்கங்களிலிருந்து ஒரே திசையை நோக்கி வருவதை பலகோணங்களில், பலவித ஹாரன் ஒலி சத்தத்துடன் காட்டப்படுகிறது...



நேரம் மாலை :- 5-20
இடம் :- சார்ஜா அண்ணாச்சி வீட்டு முன்பு...

கீழைராஸாவின் கார் அண்ணாச்சி வீட்டு அருகாமையில் உள்ள தபால் அலுவலகம் முன்பு வந்தடைகிறது...பிண்ணனி இசையுடன் சத்தமில்லாமல் போனில் பேசிக்கொள்ள...

வண்டியிலிருந்து பிரியாணி, நோன்புக்கஞ்சி, சமோசா, மற்றும் இதரப்பொருட்கள் அண்ணாச்சி வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது...


கஞ்சி கலயத்தை குசும்பனும், சிம்ம பாரதியும் கஷ்டப்பட்டு தூக்கி செல்ல ...
பிரியாணிச் சட்டியை நான் ஆதவனும், கீழை ராஸாவும் நகற்றிச்செல்ல ..
இதர பொருட்களை , சென்ஷி, அண்ணாச்சி, கோபி, இஸ்மத் பாய், ராஜா காமால் ஆகியோர் எடுத்துச் செல்ல அவர்கள் வருசையாகச் செல்வதை டாப் ஆங்கிலில் காட்டப்பட்டு பிண்ணனி இசையில்...

( சுப்பிரமணியபுரம் "மதுரை குலுங்க குலுங்க ...இந்த மண்ணு மணக்கிற மல்லிகைப்பூ மனசை" என்ற மெட்டில் கீழ்கண்ட பாடல் ஒலிக்கிறது...

"சார்ஜா குலுங்க குலுங்க ஒரு சாகாஸம் பண்ணப்போறோம்...
துபாய் மணக்க மணக்க ஒரு இப்தாரு வைக்கப் போறோம்...

துபாய் மண்ணு மணக்கிற நோன்புக்கஞ்சி
சார்ஜா வீதி எடுத்துச் சொல்லும்
இங்கு வந்து குவிகின்ற பதிவர் வட்டம்
நல் பேரை எடுத்துச் செல்லும்..."

லிப்டில் ஏறி வலது பக்கம் திரும்பி கேமரா முன்னோக்கிச்செல்ல... அண்ணாச்சி வீடு அமர்க்களமாய் வரவேற்கிறது....


நேரம் மாலை :- 5-30
இடம்: அண்ணாச்சி வீடு

அதன் பின் செந்தில்வேலன், கார்த்திக்கேயன் வருகை...
பழங்களுடன் சகோதரி ஜெஸீலா குடும்பத்துடன் வருகை...
ஆசாத் அண்ணன், சுபைர், மற்றும் தினேஷ் வருகை....



இப்படி எல்லோரும் குழுமி... அந்த ஹால் ஒரு கல்யாண வீடு போல் கலை கட்டுகிறது...அண்ணாச்சி மலர்ந்த முகத்துடன் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருக்கிறார்...


கிச்சனை பெண்களுக்கு விட்டுக்கொடுக்காமல் இஸ்மத் பாயும், சிம்ம பாரதியும் ஆக்ரமித்திருந்தனர்..மற்ற நண்பர்கள் பம்பரமாய் சுழன்று ஹாலில் பதார்த்தங்களைப் பரப்புகின்றனர்...
ஒரு சில நிமிடங்களில் அந்த ஹால் பந்தி போல் மாற எல்லோரும் அவர்வர் இடத்தைப்பிடித்து அமர்கின்றனர்...
படகு பதிவர் குடும்பத்துடன் வருகை...
ஃபாஸ்ட் பௌலர் குடுமத்துடன் வருகை..
நண்பன் ஷாஜி, மற்றும் அண்ணன் லியோ வருகை
அப்போது சுல்தான் பாயும் வருகை தர அண்ணாச்சியும் சுல்தான் பாயும் உணவு தரச்சோதனையில் இறங்குகின்றனர்..



நேரம் மாலை :- 6-20
சுல்தான் பாய்: ஆசிப் உணவு வகைகள் சற்று அதிகமா இருக்குதோன்னு தோணுது...

அண்ணாச்சி: சுல்தான் பாய் நம்ம பசங்களை குறைச்சி எடை போட்டுடாதீங்க...அங்கே பாருங்க கலையரசன் முன்னாலே எடுத்து வச்சிக்கிட்டு இருக்கிற தட்டை...மொத்தமா ஆறு பேரு சாப்பிட வேண்டியதை அவன் ஒருத்தனே கைப்பற்றி இருக்கான்...குசும்பனைப் பாருங்க 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் விசில் கொடுக்க காத்திருப்பது போல காத்திருக்கான்...எனக்கு பயமெல்லாம் எங்கே இதுவெல்லாம் அவங்க பசிக்கு ஈடு கொடுக்காமே போயிடுமோ என்கிறது தான்...
சுல்தான் பாயின் கருணைப்பார்வை....
கலையரசனின் கழுகுப்பார்வை....
சுல்தான் பாய்: (மனதுக்குள்) நாம தான் தப்பா கணிச்சிட்டோமோ..??


நேரம் மாலை :- 6-25
ரகுவரன் போல் ஒருவர் வருகிறார்..."அட நம்ம பினாத்தல் சுரேஸ்"...என்று சென்ஷி ஓடிவந்து மரியாதை செய்கிறார்....மூத்த பதிவர்கள் அவரைச்சூழ 'பெரிய பழம் தின்று கொட்டை போட்ட பதிவர் போல' என்று மற்றவர்கள் ஆர்வத்துடன் பார்க்க, அவர் தான் "கவிமடதளபதி" என்பதை அறிந்து புதுப்பதிவர்கள் டரியலாகிறார்கள்....



நேரம் மாலை :- 6-30
அண்ணாச்சி டிவி ஐப் போடுகிறார்..சன் டிவி ஓடப்போகிறதென்று குசும்பன் ஆவலுடன் டிவி முன் அமர, துபாய் சேனலுக்கு டியூன் பண்ணுகிறார் அண்ணாச்சி... அதில் ஏதோ ஒரு சேனலில் பாங்கு சொல்ல, குசும்பனும், கலையரசனும் பாங்கு சொல்லியாச்சி, சொல்லியாச்சு என்றபடி குசும்பன் சமோசாவை வாய்க்குள் அழுத்த, கலையரசன் தர்பூசணியை திணிக்க...ஏனையோர் இது சரியான பாங்கு இல்லை என்று அமைதிகாக்க இருவர் முகத்திலும் ஈ ஆடவில்லை...
நேரம் மாலை :- 6-35
சுபைர் தோற்றத்தில் திடீர் மாற்றம்..முகத்தை பவ்வியமாக வைத்துக்கொண்டு...தொப்பியை வைத்துக்கொள்கிறார்...( எங்கே தான் இந்த நடிப்பு கலையை கற்றியோ என்று குசும்பன்...சுபைரை பார்க்க, சுபைர் இன்னும் குழந்தை போல் முகத்தை வைத்த படி தயாராகிறார்...

நேரம் மாலை :- 6-36

எங்கும் சலசலச் சத்தங்கள், அண்ணாச்சியின் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தத்தில் கூட்டம் கப்சிப்...

நேரம் மாலை :- 6-40

எல்லோரும் அவரவருக்கு விருப்பமான உணவை கையில் எடுத்துக் கொள்கின்றனர்...

நேரம் மாலை :- 6-42

டி.வியில் இப்தார் நேரத்தை உணர்த்த பீரங்கி சத்தம் டமார் என்று ஒலிக்க...
ஸ்டார்ட்.... ( 10 நிமிடங்கள் சென்ஸார்)( திரைப்பட வரலாற்றில், திரைக்கதையில் சென்ஸாருக்கு இடம் ஒதுக்கியவன் நானாகத்தான் இருப்பேன்)

நேரம் மாலை :- 6-52
வடையுடன் வரவேண்டிய சுந்தர்...பழவகையுடன் வருகிறார்..

நேரம் மாலை :- 6-55
மக்ரீப் தொழுகை
நேரம் மாலை :- 7-00

அண்ணாச்சி நடுநிலை வகுக்க பதிவர்வட்டம் உருவாகிறது...அண்ணாச்சி மூலம் ஒவ்வருவராய் அறிமுகப்படலம்...( டாப் ஆங்கிலும் க்ளோசப்மாக அறிமுகப்படலம் நிறைவேற, ப்ராது விசாரனை ஆரம்பம்...



செந்தில் வேலன் மீது கொண்டு வரப்பட்ட ப்ராதுக்கும் பதிலளிக்கும் விதமாக,
செந்தில்வேலன்: பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட கந்த சாமி படத்தை கும்மியது தவறு..அது மற்றவர்களை படம் பார்க்க விடாமல் செய்கிறது.
பினாத்தல் சுரேஷ்:நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு தானே சொல்ல முடியும்...
செந்தில்வேலன்: அட்லீஸ் அதை உடனே பண்ணாதீங்க அட்லீஸ் ஒருவாரம் விட்டாவது ஆரம்பிங்க...இது போல செய்றதை உடனே நிறுத்தச்சொல்லுங்க...

கீழைராஸா: மூணு நாளா கண்ணு முழிச்சி, ஏண்டா பேயறைஞ்சவன் மாதிரி இருக்கேன்னு ஆபிசுலே, வீட்டுலே , நண்பர்க கிட்டே எல்லாம் திட்டு வாங்கி..கஷ்டப்பட்டு பதிவெழுதுனா...ஜார்ஜ் புஸ், சதாம் ஹுசைன்னு பல பேர்லே வந்து கும்மிட்டு போறாங்களே அதை நிறுத்தச் சொல்லுங்க ... நாங்க நிறுத்துறோம்....
குசும்பன்: (மனதுக்குள்) ஐயய்யோ நம்ம தலையிலே கையை வைக்கிறாரே...?
( சில நிமிடங்கள் மௌனப்படமாக சண்டை தொடர்கிறது...)
சில ப்ராதுகளுக்குப் பின்...
சகபதிவர் செந்திநாதனுக்கு அமீரக பதிவர்களின் பங்களிப்பு மற்றும் ஒற்றுமை குறித்து அண்ணாச்சி ஓரிரு வார்த்தைகள் பேசுகிறார்..
அடுத்து...
கவிஞர் நாசரின் ( ராஜா கமால்) "பூத்து மகிழும் பூக்கள்" கவிதைத் தொகுப்பை வெளியிட, அதன்பிரதிகளை, அண்ணாச்சி, நண்பன் ஷாஜி, சுல்தான் பாய், சகோதரி ஜெஸீலா ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்...



நேரம் மாலை :- 8-30
பிரியாணி படலம்...சில நொடிகளில் ஹால் தயார் செய்யப்படுகிறது...பிரியாணி சிக்கனுடன் அடுத்த சென்ஸார்...
நேரம் இரவு :- 9-00
அரட்டை தொடர்கிறது...ஒரு சிலர் விடை பெறும் நேரம்...உறவின் உன்னதம் பிரிவில் தான் தெரியும் என்பார்கள்...கூப்பிடும் தூரத்தில் இருந்தாலும் விடைபெறும் வேளை எல்லோர் முகத்திலும் கவலை...
இன்னும் சிறிது நேரத்தில் எல்லோரும் விடை பெற்று விடுவர்..ஆனால் இந்த சிலமணி நேர திருவிழா எல்லோர் மனதிலும் மறக்க முடியாத பாகத்துள் பதிவாகி விடப்போவதென்னவோ மறுக்க முடியாத உண்மை....
-கீழை ராஸா பாலையிலிருந்து....

விடைபெறுகிறார் அண்ணாச்சி..!

அன்று சூரிய கிரஹணம்...பிரபல ஜோதிடர்கள் கணித்தது போல் பூகம்பம், சுனாமி, என்று பூமியில் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்றாலும் அரசியல் களத்தில் அன்று பெரும் சுனாமி நிகழ்ந்தது...




"அண்ணாச்சி இளம் மாறன் அரசியலிலிருந்து வெளியேறுவதாக அறிக்கை விட்டு விட்டானாம்..."

த.ப.க கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இடியாய் விழுந்தது அந்த செய்தி...
"எப்படி சாத்தியம் இப்ப அவன் தானே அரசியல் 'டாக் ஆப் டவுன்' சான்சே இல்லை..." மூத்த தலைவரில் ஒருவரான செந்தாமரை.

மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

"அவன் நாடகம் ஆடறான் அண்ணாச்சி, விடை பெறுகிறேன்னு போன எவனும் அரசியல் விட்டு போனதா சரித்திரமே இல்லை ...இதெல்லாம் அரசியல் ஸ்டெண்ட்"

"ஆமா அண்ணாச்சி, நாங்க பலமுறை உங்களுக்கு சொன்னோம் அவனுக்கு முன்னுரிமை கொடுக்காதீங்கன்னு...உங்களைப் போலவே அரசியல் பண்ணுறான்னு தலையிலே வச்சிக்கிட்டு ஆடுனீங்க இப்ப, அவன் ஆடுற ஆட்டத்தைப் பார்த்தா அவன் அரசியலில் உங்களை மிஞ்சிடுவான் போலிருக்கிறது..."

மூத்த தலைவர்கள் ஆளாலுக்கு பேச இளம் தலைவர்கள் அமைதிகாத்தனர்.

அண்ணாச்சி முகம் என்றுமில்லா இறுக்கத்தில் இருந்தது.

அண்ணாச்சி என்ற அருணாச்சலம் அரசியலில் ஒரு பழுத்த பழம். த.ப.க கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் அண்ணாச்சி இன்றைய அரசியல்வாதிகளின் முன்னோடி...சமீப காலத்தில் கட்சியில் சேர்ந்த இளமாறன் அவர் ஜாதி (என்ன மொக்கை சாதியோ) என்பதால் அவருக்கு அவன் மீது அலாதிப்பிரியம்.கட்சி மாநாட்டில் திடீரென்று கட்சியின் "சக்திமான்" என்று மணிமகுடம் சூட்ட , மூத்த தலைவர்கள் ஆடிப்போனார்கள்...இப்படி மூத்த தலைவர்கள் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கும் இளமாறன் இன்று அதன் உச்சக்கட்டமாக இந்த அரசியல் விலகல் அறிவிப்பின் பின்ணனி என்ன?

அண்ணாச்சியின் முகத்தில் இறுக்கும் கலையவில்லை...கூட்டத்தில் சத்தம் அதிகமானது...

" அண்ணாச்சி இப்படியே அமைதியா இருந்தா எப்படி...அவன் உங்க வாரிசா இருந்தாலும் பரவாயில்லை..எவனோ ஒருத்தன் அவனை வளர விடக்கூடாது."

"ஆமா அண்ணாச்சி, இப்படியே போனா இத்தன வருசமா உங்ககூடவே அரசியல் பண்ணுற நாங்க எங்கே போறது..? அவன் எதுக்கும் துணிஞ்சவன் 'எலக்சன் கமிசன்' மேலேயே குற்றம் சொல்லுறான்...எலக்ட்ரானிக்ஸ் "வாக்கு மிசினில்" குளறுபடின்னு அறிக்கை விடறான்...இதையே காரண வச்சி அவனை அரசியலை விட்டே துரத்தணும்"

"நான் அவன் கிட்டே பேசறேன்லே"

கூட்டம் கப்சிப் ஆனது...

கூட்டம் கலைந்தது...அண்ணாச்சியின் முகத்தில் இருக்கம் மட்டும் குறையவில்லை.

தொலைபேசியை எடுத்தார்...மறுமுனையில் இளமாறன் ...

"நான் அண்ணாச்சிலே.."

"சொல்லுங்க தலைவா.."

"நாம சந்திக்கணும்"

"எங்கே வர"

"வழக்கமான இடம் தான்"

கடற்கரை...காற்று வழக்கத்தை விட அதிகம் வீச அண்ணாச்சி தலையை கோதியபடி காரை விட்டு இறங்கினார்...சில முக்கியமான இடங்களுக்கு ஓட்டுநரை அழைத்து செல்வதில்லை...இப்போதும் அப்படிதான்...அண்ணாச்சி தனியாகவே வந்திருந்தார்.

இளமாறன் ஏற்கன்வே காத்திருந்தான்.

"வந்து ரொம்ப நேரமாச்சா"

"இல்ல அண்ணாச்சி இப்பதான்"

"அப்புறம் என்ன விசேசம்லே"

"எல்லாம் நீங்க சொன்ன மாதிரிதான் அண்ணாச்சி..அரசியலை விட்டு விலகுறதா அறிக்கை விட்டேன்...தொலைபேசி தொல்லை பேசியாயிடுச்சி, தொண்டர்கள் வீடு முன்னே வந்து மீண்டும் வரச்சொல்றாங்க...நான் உங்க உத்தரவுக்கு காத்திருக்கேன்..." இளமாறன்.

சிறிது யோசித்த அண்ணாச்சி, தொடர்ந்தார்...

"இன்னிக்கே அரசியல் விலகல் சம்பந்தமா உன் வீட்டில் பிரஸ் மீட்டிங் அரேன்ஞ் பண்ணு...மீட்டிங்க நடந்துக்கிட்டு இருக்கிறப்ப, சில ரவுடிங்க உன் வீட்டு முன்னாலே வந்து உன் வீட்டை தாக்குவாங்க...அரசியலை விட்டு ஓடிப்போகும்படி மிரட்டு வாங்க..

அப்ப சில கட்சிக்காரங்க வந்து அவங்களை துரத்துவாங்க...நீ அரசியலை விட்டு விலகினா உன் வீட்டு முன்னாலேயே தீக்குளிப்பேன்னு, பெட்ரோலை மேலெ ஊத்திக்குவாங்க...நீ ஓடிவந்து அவங்களை தடுக்கனும்

" உங்களை மாதிரி தொண்டர்களுக்காக நான் மீண்டும் அரசியலுக்கு வருகிறேன்னு" அங்களை கட்டிபிடிச்சபடி ஒரு அறிக்கை விடு அப்புறம் பாருலே உன் அரசியல் எழுச்சியை..."

பிரமிப்பு அகலாமல் அவரையே உற்று நோக்கி வந்த இளமாறன், அண்ணாச்சி நீங்க தெய்வம் அண்ணாச்சி...என்று காலில் விழப்போனவனை நீதாண்டா என் அரசியல் வாரிசு என்று கட்டிக்கொண்டார். அவரிடம் இருந்து மெதுவாய் விடுவித்துக்கொண்ட படி இளமாறன், "அண்ணாச்சி எதுக்கு இந்த நாடகம்..?" பயந்தபடி கேட்டான்...

"என்ன மாறா...அண்ணாச்சி அரசியலில் பழுத்து கொட்டை போட்டவன், கட்டிவா என்றால் வெட்டிக் கொண்டுவரும் தொண்டர் படையை கொண்டவன்...என்னடா ஒரு சின்னப்பயலுக்கு இவ்வளவு பண்ணுறேன்னு பார்க்குறியாளே...இந்த கூட்டமெல்லாம் அண்ணாச்சி இதே கெத்தோட இருக்கிறவரை தான்லே, உண்மையா பார்த்தா இங்கே யாரும் விசுவாசி இல்லை. எப்படா அண்ணன் காலியாவான் திண்னையைப் பிடிக்கலான்னு இங்கே பயங்கர போட்டி...இந்த பசங்க கிட்டே கட்சியை நம்பி ஒப்படைக்க முடியாது.

அப்ப தான் உன்னை பார்த்தேன் நான் அரசியலுக்கு வந்த புதுசுலே இருந்த அதே வேகம், அதே பரபரப்பு, அதே ஞானம்..அப்பவே முடிவு பண்ணினேன் இனி இந்த கட்சிக்கு நீதான் தலைவன் என்று... இருந்தாலும் நானே உன் கிட்டே இந்த பொறுப்பை தந்தா மூத்த தலைவர்கள் ஏத்துக்க மாட்டாங்க, அது தான் தொண்டர்களே உன்னை தலைவனாக ஏற்றுக்கொள்ள செய்யவே இந்த ஏற்பாடு.

இளம் தலைமுறை அரசியலுக்கு வந்து நல்லது பண்ணனுமென்று மேடைக்கு மேடை பேசறோம்... ஆனா கிழங்களான நாங்களே நாற்காலியை விட்டு அசையலைன்னா உன்னைப் போல பொறுப்புள்ள இளைஞர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்...?

உண்மையில் அரசியலிருந்து விடை பெற வேண்டியது நீ இல்லைலே...நான் தாம்ளே..."

என்ற படி தன் தோள் துண்டை இளமாறன் தோளில் போர்த்தி விட்டு நெஞ்சம் நிமிர்ந்து நடந்தார் அண்ணாச்சி..

அடுத்த நாள் தலைப்பு செய்திகளில்...

"மீண்டும் இளமாறன்...அரசியலிருந்து விடைபெறுகிறார் அண்ணாச்சி"

பி.கு:-

  • கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் 101% கற்பனையே..
  • ப்ளாக் காப்பி தடைச்சட்டம் 2009 படி காப்பியடிக்க தடை செய்யப்பட்ட வலைப்பூ இது..

"பிரபலப்பதிவர்" கீழை ராஸா என்ன சூப்பர் ஸ்டாரா?

என்ன கர்வம், என்ன திமிர், என்ன அழிச்சாட்டியம் இப்படி நினைத்த படி தான் இந்த பக்கத்திற்கு வந்திருப்பீங்க... ஒரு பிரபலம் என்றால் ஆயிரம் கல்லடிகள் படத்தான் செய்யும்...




ஜனாதிபதி கையால் விருதை வாங்கிய சேதி கேட்டு வீடு தேடி வந்த மீடியாவை அலட்சியமாகப்பார்த்து, விருது எனக்கு ஒன்றும் புதிதில்லை நான் கல்லூரியில் படிக்கும் போதே என்னோட படைப்புக்காக சாகித்திய அகடமி விருது பெற்றவன் என்ற படி ஜனாதிபதி அவார்டை கையில் வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டிய பேட்டியை இப்பவே லீக் பண்ணுறோமோ என்ற வருத்தம் இதை எழுத முற்படும் போது மனதில் தோன்றி மறைகிறது.

இருந்தாலும் நண்பர் "நட்புடன் ஜமால்" சில வாரங்களுக்கு முன் அழைத்த தொடர்பதிவிற்காக இந்த பிரபலப்பதிவரின் பேட்டி உங்கள் பார்வைக்கு...



1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

முகம்மது ராஜாக்கான் - என் பெயர்
"ராஸா" அன்பானவர்கள் அழைக்கும் பெயர்....

கீழக்கரை - என் ஊர்

"கீழை மாநகரம்" ஊருக்குச் செல்லப்பெயர்...

இரண்டும் இணைந்தது தான் "கீழை ராஸா" ( எல்லோரும் பலமா கைதட்டுங்க...இது தான் ஹீரோ (ஜீரோன்னு படிச்சிடாதீங்கப்பூ) அறிமுக காட்சி...)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
"அழுகையை அழுது வடிப்பதை விட அடக்கி வைப்பதே கடினம்" என்ற கொள்கை உடையவன் நான்...

சில இதயக்கீரல்களின் போது...


"அடியே பெண்ணே நீ மட்டும் ஆறுதல் சொல்லவதாய் இருந்தால் அழுது கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறதே..." என்ற அந்த கிராமத்து ராஸாவின் வரிகளுக்கிணங்க, பிரியமானவளின் தோள் சாய்ந்து அழத்தோன்றும் இருந்தாலும் எனக்கு கடின வேலைகள் செய்யப்பிடிக்கும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என்னைப்போலவே என் எழுத்துக்களும் குண்டு குண்டாய் அழகாய் (அதிர்ச்சி ஆகிடாதீங்க எழுத்துக்கள் மட்டும்) இருப்பதாய் எல்லோரும் சொல்வார்கள்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

வாரம் முழுவதும் இயந்திரமாகவே மதிய உணவும் அமைவதால், விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை மதிய உணவே மனம் நிறைந்த மதிய உணவு.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நீயூட்டன் மூன்றாவது விதிக்கு நான் சரியான உதாரணம் எதிரே இருப்பவர் எப்படியோ அப்படியே என் எதிர் விசையும் இருக்கும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

நல்லவேளை குளிக்கப் பிடிக்குமா என்று கேட்கவில்லை...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்... அது தான் உண்மை பேசும்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது...மற்றவர்கள் நிலையிலிருந்து யோசிக்கும் தன்மை...
பிடிக்காதது...அவ்வப்போது என்னுள் ஏற்படும் சோம்பல்....எப்போதாவது வரும் கோபம்...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

தன்னை விட என்னை விரும்பும் " ராட்ஷச" அன்பு

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் தாய்...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெளிர் வர்ணம்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கணிணியை கண் இமைக்காமல்....காதில் ஏசியின் ஓசை...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

14.பிடித்த மணம் ?

எல்லா "மண"ங்களையும் ஒருங்கே இணைத்து
எங்கள் இரு"மன"த்தை ஒன்றிணைத்த என் திருமணம்...

ரோஜாவின் மணம்...

மழைநேர மண்ணின் மணம்...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் ஒருவரை அழைக்கப்போவதில்லை... துபாய் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து பிரபல பதிவர்களையும் அழைக்கிறேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
"நட்புடன் ஜமால்" அவர் பெயரே ஒரு பதிவுதான்..."நட்புடன்" என்ற பெயரை மட்டும் வைத்து கொண்டிராமல் அனைத்து புதுபதிவர் பதிவுகளிலும் சென்று அதை படித்து கமெண்ட் போட்டு பின்னூட்டங்கள் மூலமே அனைவர் மனங்களிலும் பதிந்தவர் அவர்...

17. பிடித்த விளையாட்டு?

அன்று - கிட்டி கம்பு(கிட்டி புல்)
இன்று - கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?

முன்னாடி இருப்பதை பார்ப்பதற்கு
கண்ணாடி அணியாவிட்டாலும்
பின்னாடி பிரச்சனைகள் வராமல் இருக்க
அவ்வப்போது கண்ணாடி அணிவதுண்டு...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

எதார்த்தப்படங்கள்...

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க...
21.பிடித்த பருவ காலம் எது?

வசந்தம் வீசிய, வீசும் எல்லாப்பருவமும்...

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

என் பழைய டைரிகளை...

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாற்றம் ஒன்றே மாறாதது...

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

தென்றலின் வயலின்.... அருகில் வந்து அடிக்கப்படும் ஹாரன் ஒலி..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

முதல் முதல் பள்ளி சென்ற போது அந்த ஆரம்பப்பள்ளி எனக்குத் தெரிந்த தூரத்திற்கு இன்று நான் பயணித்திருக்கும், அமீரகம், ஏமன், ஓமன், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகள் கூட தெரிவதில்லை.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஒரு சூப்பர் ஸ்டாரைப்பார்த்து கேட்கும் கேள்வியா இது...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நான் எட்டாவது படித்த போது நிகழ்ந்த என் தாயின் மரணம்..

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அது தூங்கும் போது ஏனய்யா தட்டி எழுப்புறீங்க...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கோவா...சிங்கை

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

நான் நானாக...எப்போதும்...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

எனக்கு பொய் சொல்ல பிடிக்காது...( இதுவே ஒரு பெரிய பொய் தானேன்னு கமெண்ட் போட்டுடாதீங்க)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

முட்கள் நிறைந்த பூஞ்சோலை...

தொட‌ர்ப‌திவுக்கு நான் அழைப்ப‌து,
அமீரக தமிழ் பதிவர்களே, மாநாட்டுக்கு வந்த பிரபலங்களே, மற்றும் அமீரக தமிழ் பதிவர்கள் குழும உறுப்பினர்களே....
வாருங்கள் பிரபலங்களே வந்து குமுறுங்கள்...

Related Posts with Thumbnails