ஈழப்பிரச்சனை, கலைஞரின் உண்ணாவிரதம், அரசியல் அனல், போர் நிறுத்தம். இவை எவற்றிற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாளும் இதன் நாயகன் கலைஞரைப் பற்றி அவரின் எண்பத்தைந்தாம் அகவை ஒட்டி எண்பத்தைந்து கவிதை தொகுப்பை வெளியிட முயற்சித்து அதன் தொடர்பாக கவிஞரொருவர் கவிதை சேகரிக்க அமீரகம் வந்த போது என் பங்கிற்கு கலைஞரைப் பற்றி நான் எழுதி அளித்த கவிதை இது…
நீண்டதொரு கூட்டமுண்டு- என்பதால்
தங்கள் குறைகள் பாட
கு(ழ)ரலெடுத்து வந்துள்ளேன்…
குறைகளையும் நிறையாக்கியவன்
உன் உயரத்தில் நீ சற்றே குள்ளம்…
உன் உருவ ஆளுமைக்கு அது
சற்று குறைவானது தான் – ஆனால்
அரசியலில் உன் சாதனை உயரம் கண்டு
எவரெஸ்ட்டும் உன்னை
தலை நிமிர்ந்து பார்க்கிறதே-அந்த
தந்திரமென்ன…?
உன் குரலின் கரகரப்பு,
உன் பரபர்ப்பு வார்த்தை வேகத்திற்கு
சிறு குறை தான் – ஆனால்
உன் கரகரப்புக் குரலில்
கட்டுண்டு கிடக்கும் கூட்டம் கண்டு
குயில் கூட உன் குரல் மாற்றி
கூவ முயற்சிக்கும்
மந்திரமென்ன…?
“சூரியனுக்கொளியே...”
கருப்பு கண்ணாடி - உன்
விழிகளின் விலாசமென்பது
உன் பார்வைக்குறை குறைக்கத்தான் –ஆனால்
ஒட்டுமொத்த கலைச் சமுதாயமே
உன் விழிவழியே- பூலோகம்
நோக்க காத்திருக்கும்
விஞ்ஞான மர்மமென்ன..?
“சிந்தனை சிறுத்தையே…”
உன் நடையின் தளர்வு
உன் பொழுது வேகத்திற்கு
சற்றே குறை தான் –ஆனால்
உன் எண்ண வேகத்திற்கு
எந்த எழுத்தாணியும்
ஈடுகொடுக்க இயலா தவிக்கும்
மாயாஜாலமென்ன…?
“கவிபாடும் கணிப்பொறியே”
இளம் தலைமுறைக்கு – நீயொரு
செம்மொழி தந்த “தமிழ்”
அரசியல் “கணித” மேதை
எழுத்துலகின் “விஞ்ஞானம்”
வாழும் “வரலாறு”
சகலகலா திறன் கொண்ட “ பூகோளம்”
“கலைஞரே”
எண்பத்தைந்தென்பது
உமக்கு குறையா..? நிறையா..?
என நிறைய சிந்தித்தாலும்
நிறைகள் மட்டுமே நெஞ்சில்
நிறைகிறது … மற்றவை உம் முன்
மறைகிறது…