சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகள்-1

(தன் குடும்ப வாழ்வை வளப்படுத்த கடல் கடந்து வந்து,இந்த எண்ணெய் தேசத்தில் தங்கள் இளமையைத் தொலைத்து நிற்கும் ஆயிரக்கணக்கான மெழுகுத்திரிகளுக்கு இந்த படைப்பைக் காணிக்கையாக்குகிறேன்)



எனக்கு உறக்கம் வரவில்லை... புரண்டு படுத்தேன்...மீண்டும் புரண்டு படுத்தேன் கடிகாரத்தை இருபதாவது முறை பார்த்தேன், மணி நள்ளிரவு 2.30 நண்பர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். மெல்லிய குறட்டை சத்தம் விதவிதமாக....இவற்றை மிஞ்சும் ஏ.சி. சத்தம் ஒருபுறமாக....மீண்டும் புரண்டு படுத்தேன். உறக்கம் வரவில்லை.அறையின் இருட்டு கண்களுக்கு பழகிவிட்டிருக்க, சிந்தனையுடன் என் அறையைக் கண்களால் துழாவினேன்.அது 150 சதுர அடி புறாக்கூடு, பத்துபேரின் பங்களா இது ! ஊரில் இவர்களுக்காக பங்களாஉம் பகட்டு வாழ்க்கையும் காத்திருக்க, இங்கே கனவுகளைச் சுமந்து காகிதத்தில் அழுது, ஆசைகளை தபாலில் அனுப்பும் துர்பக்கியசாலிகள் இவர்கள்… நான்…? நீண்ட பெருமூச்சுடன் காரை பெயர்ந்த கூரையை உற்று நோக்கினேன். தூரத்தில் ஆம்புலன்ஸ் சைரன் ஒலி, அதன் சத்ததிற்கேற்ப எனை 18 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச்சென்றது.

நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த பொக்கிஷம். ஐந்து பெண் குழந்தைகளுக்குப் பின் தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே ஆண்மகன். வீட்டின் செல்லப்பிள்ளை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று தான் என் பள்ளிப்பருவமும் நகர்ந்தது, அப்போது நான் பத்தாவது படித்துக் கொண்ற்றுந்தேன்.வழக்கமாக் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பினேன்.எனக்குத் தெரியாது என் வாழ்வில் அன்று ஒரு சுனாமி நிகழும் என்று..! வீடு சென்றேன், அங்கே அஜீஸ் மாமா வந்திருந்தார். அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“மச்சான், நான் சொல்லுறதை கேளுங்க, உங்களுக்கும் வயசாகிப்போச்சி, ஐந்து பெண்ணுக்கும் கல்யாண வயசு ஆயிருச்சி, இவன் படிச்சி என்ன பண்ணப் போறான்..? நம்ம ஆசிஃப் அண்ணன் துபாயிலே இருக்காரு, ஊருலே பாருங்க அவர் வசதியை, அவர் என்ன ஐஏஸ்ஸா படிச்சாரு..? வெறும் அஞ்சாவது தான் படிச்சிருக்காரு, இப்ப அவரு ஊருக்கு வந்துருக்காரு, அவருக்கு வேலைக்கு சிலபேர் வேணுமாம், நீங்க ஊம் னு ஒரு வார்த்தை சொல்லுங்க, நம்ம ரஹீமை துபைக்கு அனுப்புறது என் பொறுப்பு.”

அப்பா யோசிச்சார், எனக்கு ஆத்திரம் வந்தது, துபாய் வாழ்க்கை நமக்கு கிடைக்க மாமா எவ்வளவு மெனக்கெடுறாரு, இவரு ஏன் யோசிக்கிறாரு..? உள்ளுக்குள் பொருமியபடி சமையல் அறையிலிருந்த அம்மாவிடம் அதைக்கொட்டினேன்.

“ டேய் ரஹீமு என்னை என்னடா பண்ணச் சொல்றே ...? அப்பா எது பண்ணினாலும் உன் நல்லதுக்குத்தான் பண்ணுவாரு…”

அப்பா ஆரம்பித்தார், “அஜீசு, நாம தான் படிக்காமப் போயிட்டோம், ரஹீமாவது நம்ம குடும்பத்துலே படிச்சு பெரிய ஆளா வரட்டும். நான் ஐந்து பெண்களைப் பெற்றதுக்கு அவன் என்னடா செய்வான் ? அவன் தலையிலே சுமையை வைக்க நான் விரும்பவில்லை. இந்தப் பேச்சை இத்தோடு விட்டுவிடு, நான் நம்ம இஞ்சினியர் மாதிரி ரஹீமை பெரிய இஞ்சினியருக்கு படிக்க வைக்க போகிறேன்”.

“ மச்சான் உங்க ஆசை வாஸ்த்துவம் தான், ஆனா வயசுக்கு வந்த பொண்ணுங்க ஐந்து இருக்குங்கிறதை மறந்துடாதீங்க..பொண்ணுங்க கல்யாணத்தை பார்ப்பிங்களா…இல்லை அவன் படிப்பை பார்ப்பீங்களா..?

அப்பா விடுவதாய் இல்லை, “அஜீசு படைத்த அரிசியிலேயே யார் யாருக்கு எது என்று எழுதிவைத்த ஆண்டவன், என் பிள்ளைகளுக்கு வழி காட்ட மாட்டானா ? இதோட இந்த பேச்சை விடு” அப்பா குரலில் சற்று கடுமை கலந்திருந்தது, அஜீஸ் மாமா போய் விட்டார்…
எனக்கு ஆத்திரம் அதிகமானது, ஆத்திரத்தில் உறங்கிப்போனேன்…திடீரென்று அம்மாவின் அலறலில் பதறி எழுந்தேன், அக்காமார்களும் ஓடி வந்தார்கள், அம்மா கதறியபடி இருந்தார்… அப்பா கட்டையாக கிடந்தார்,அப்பா, அப்பா என்று நாங்கள் துடித்தோம், அவர் மூச்சு அடங்கி இருந்தது

பாழாய்ப்போன மாரடைப்பு என் அப்பாவை எங்களிடமிருந்து பிரித்தது, நாங்கள் ஒரே நாளில் நிர்கதியானோம், அஜீஸ் மாமா வந்தார், பாஸ்போர்ட், விசா எல்லாம் மூன்று மாதங்களில் தயார், என் அப்பாவின் இஞ்சினியரிங் கனவு , அவருடன் மறைந்தது…

நான் துபாயிக்கு வந்திறங்கினன், என் போன்று ஏராளமானோர் இருந்தார்கள், அது ஒரு லேபர் கேம்ப், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை, ஒவ்வொரு பொறுப்பு, பறந்து வந்த பின்புதான் புரிந்தது, நாங்கள் சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகளென்று…

மாமா, சாச்சா என்று இங்கு உறவிகள் அதிகம். இது சந்தோஷத்தில் சங்கமித்த கூட்டமல்ல, சோகத்தில் இணைந்த உறவு! வேலைக்குச்சென்றேன், ரோடு போடும் கம்பெனியில் வேலை. பாலைவன நடுவில் பணி.ஊர் வெயிலில் வெளியே சென்றாலே கறுத்து விடுவாய் எனக்கருணை காட்டும் அம்மா இங்கு பார்த்தால் ? சமையலறைக்குள் நுழைந்தாலே சூடு தாங்க மாட்டாய் போ தம்பி போ தம்பி எனப் பதறும் அக்காமார்கள் இங்கு வெயிலில் வேகும் என்னைப் பார்த்தால் ? அவர்கள் சந்தோஷம் காக்க என் சங்கடம் மறைத்தேன்.

இங்கு செருப்பாய் தேய்தபோதும் சேக் உடையில் புகைப்படம் அனுப்பினேன்,இங்கு கதறி அழுதபோதும் காருடன் நின்று படம் அனுப்பினேன். வேதனை மறைத்தேன் வெந்த புண் மறைத்தேன்..இரவில் நண்பர்களின் சோகக்கதை கேட்ட போது வேதனை மறந்தேன், வெந்த புண் மறந்தேன்…சம்பாதித்த பணத்தை அப்படியே அனுப்பினேன், பணம் போத வில்லை என்று மடல்…என் கஷ்டம் மறைத்தது எனக்கே கஷ்டமாய் போய் விட்டது.அப்பா கொடுத்த ஐநூறு ருபாயில் காலம் தள்ளியவர்கள், நான் அனுப்பும் ஐயாயிரம் ரூபாய் காணாதென்றார்கள், கேட்டால் சம்பாதிக்கிறேன் என்று கேள்வி கேட்கிறாயா? என்று அம்மா அழுவாள்…எதற்காக இந்த கஷ்டம் ..? அவர்களுக்காகத்தானே…? பின்னே அவர்களை அழவைக்கலாமா..? அதன் பின் அவர்கள் கேட்ட அனைத்தையும் அனுப்பினேன். முதல் அக்காவிற்கு வரன் வந்தது…கடன் பட்டு கல்யாணம் நடத்தினேன். வருடங்கள் கடந்தன…



வேலையில் என் திறன் பார்த்து புரொமோஷன் வந்தது. லேபரில் இருந்து ஸ்டாஃப் ஆனேன்.பெருமை என்னைப்பற்றிக்கொண்டது. கிரீடம் சூட்டப்பட்டதாக மகிழ்ந்தேன். அப்போது எனக்குத்தெரியவில்லை எனக்கு உயர்த்த்ப்பட்ட சம்பளத்தை விட என் செலவு இரட்டிப்பு ஆகுமென்று… ஆம், கேம்பிலிருந்து வில்லாவிற்கு மாறினேன்.முன்பு போல ஒரு ஜோடி துணிகளை வைத்து வாரம் முழுவதும் கடத்த இயலவில்லை. என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு ஏற்ப என்னை அலங்கரித்துக்கொள்ள வேண்டிய சூழல் செண்டு, புது உடைகள், ஷஊ, ஹோட்டல் சாப்பாடு என்று என் வாழ்க்கை முறையில் அதிரடி மாற்றம் என்னைத் தடுமாற வைத்தது. கேம்பில் இருக்கும் போது பெப்ஸி குடிக்கவே நூறு முறை யோசித்த நான் இப்போது பீர் குடிப்பதை பெருமை என்று நினைக்க ஆரம்பித்தேன்.

அடுத்த அக்காவின் திருமணம் … துபாய் வந்து வருடங்கள் பலவாகியதால், ஊர் செல்ல வேண்டிய தருணமும் வந்தது.தெரிந்தவர்கள் எல்லோரிடமும் கடன் … ஊர் சென்றேன், ராஜ மரியாதை… பணம் கரைந்தது, மரியாதையும் கரைந்தது, மீண்டும் பாலை நகரம் நோக்கிப் பயணம். மீண்டும் பத்து வருடம் ஊர் செல்வதை மறந்து உழைத்தேன், உழைத்து, உழைத்து ஒட்டகமானேன். அக்கா அனைவருக்கும் திருமணம் முடிந்தது. சுமைகளை இறக்கி வைத்த பின்னும் கூனல் குறையவில்லை. அடுத்து உனக்குத்தான் திருமணம் என்று நண்பர்கள் கேலி செய்ய ஆரம்பித்தார்கள். முதன் முறையாக என்னைபற்றி கனவு காண ஆரம்பித்தேன். அன்று அம்மா டெலிப்போனில் அழைத்திருந்தார். வழக்கமாக நான் தான் அழைப்பேன், அவர் அழைத்திருக்கிறார் என்றால் எதோ முக்கியச்செய்தி தான். என்னவாக இருக்கும்..? ஒருவேளை பொண்ணு பார்த்து வைத்திருப்பார்களோ..? என்ன சொல்வது ஒத்துக்கொள்ளலாமா..? இல்லை பிடிக்காததை போல் நடிக்காலாமா? என்று சிந்தித்த படி “அம்மா” என்றேன்…

பதில் சுகமா..? சோகமா?

தொடரும்….

12 comments:

லொடுக்கு said...

காக்கா,
நல்லாத்தான் தொடங்கியிருக்கிய. கலக்குங்க. :)

// நம்ம ஆசிஃப் அண்ணன் துபாயிலே இருக்காரு, ஊருலே பாருங்க அவர் வசதியை, அவர் என்ன ஐஏஸ்ஸா படிச்சாரு..? வெறும் அஞ்சாவது தான் படிச்சிருக்காரு, //

யாரு நம்ம அண்ணாச்சியா? சொல்லவே இல்லை. :))

லொடுக்கு said...

காக்கா,
நல்லாத்தான் தொடங்கியிருக்கிய. கலக்குங்க. :)

// நம்ம ஆசிஃப் அண்ணன் துபாயிலே இருக்காரு, ஊருலே பாருங்க அவர் வசதியை, அவர் என்ன ஐஏஸ்ஸா படிச்சாரு..? வெறும் அஞ்சாவது தான் படிச்சிருக்காரு, //

யாரு நம்ம அண்ணாச்சியா? சொல்லவே இல்லை. :))

கீழை ராஸா said...

லொடுக்கு சார்,
வருகைக்கு மிக்க நன்றி,

இப்பவெல்லாம் வலைப்பூங்காவில் "ச்ச்சீசீ "க்குத் தான் மெளஸ்...தப்பா எடுத்துக்காதீங்க..தமிழச்சீ,அண்ணாச்சீன்னு,சொல்ல வந்தேன்..,நான் எதையோ எழுத அண்ணாச்சிக்கும், நமக்கும் கோத்து விட்டுடாதீங்க, லொடுக்கு மாமா...

நிலாரசிகன் said...

இதை படித்தவுடன் என் நண்பர் ரசிகவ் ஞானியார் எழுதிய "தூக்கம் விற்ற காசுகள்" கவிதை நினைவில் பூத்தது.

தொடருங்கள் நண்பரே. அருமை.

Aruna said...

//ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை, ஒவ்வொரு பொறுப்பு, பறந்து வந்த பின்புதான் புரிந்தது, நாங்கள் சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகளென்று…//

எத்தனை உண்மையான வரிகள்!!!
அன்புடன் அருணா

கீழை ராஸா said...

வருகைக்கு மிக்க நன்றி... நிலா ரசிகரே...

கீழை ராஸா said...

மிக்க நன்றி அருணா...

கீழை ராஸா said...

நிலா ரசிகரே,
தங்கள் படைப்புகளை நான் ஏற்கனவே சில forward mails மூலம் படித்திருக்கிறேன்.மிக அருமையாக இருக்கும், நீங்கள் என் வலைப்பூங்காவிற்கு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி தருகிறது

M.Rishan Shareef said...

அன்பின் கீழை ராஸா,

உங்கள் கதை அழகான எழுத்துநடையில் விழிநீரும்,சுடும் நிஜங்களும் ஒரு சேரக்கலந்து எழுதப்பட்டிருக்கிறது.
உங்களைப் போன்றே பாலைவனப் பரப்பொன்றில் இருக்க விதிக்கப்பட்ட எனக்கும் இதே அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன.

நாடு தாண்டி,கண்டம் தாண்டி நாமிருந்து வாட எமது சொந்த ஊர் என்ன சொல்கிறது?
"அவனுக்கென்ன?அவன் வெளிநாட்டில் இருக்கிறான்.அத்தனை சுகபோகங்களும் அவனைச் சூழ்ந்திருக்கும்".

எமது ஆரோக்கியத்தையும்,சந்தோஷங்களையும் உடல் பருமனிலும்,கொண்டு செல்லும் திரவியங்களிலும் மட்டுமே கண்டடையும் கூட்டம்.

வாழ்த்துக்கள் நண்பரே.தொடர்ந்து எழுதுங்கள்.

ashok said...

wud like to see more fotos along with ur interesting writeups...padam kaati kadhai solluda...

கீழை ராஸா said...

நன்றி ரிஸ்வான் அவர்களே..! உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

Asir said...

Ji Sap..

Really Nice to read your post...
Congrats..

Related Posts with Thumbnails