அன்று சூரிய கிரஹணம்...பிரபல ஜோதிடர்கள் கணித்தது போல் பூகம்பம், சுனாமி, என்று பூமியில் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்றாலும் அரசியல் களத்தில் அன்று பெரும் சுனாமி நிகழ்ந்தது...
"அண்ணாச்சி இளம் மாறன் அரசியலிலிருந்து வெளியேறுவதாக அறிக்கை விட்டு விட்டானாம்..."
த.ப.க கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இடியாய் விழுந்தது அந்த செய்தி...
"எப்படி சாத்தியம் இப்ப அவன் தானே அரசியல் 'டாக் ஆப் டவுன்' சான்சே இல்லை..." மூத்த தலைவரில் ஒருவரான செந்தாமரை.
மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
"அவன் நாடகம் ஆடறான் அண்ணாச்சி, விடை பெறுகிறேன்னு போன எவனும் அரசியல் விட்டு போனதா சரித்திரமே இல்லை ...இதெல்லாம் அரசியல் ஸ்டெண்ட்"
"ஆமா அண்ணாச்சி, நாங்க பலமுறை உங்களுக்கு சொன்னோம் அவனுக்கு முன்னுரிமை கொடுக்காதீங்கன்னு...உங்களைப் போலவே அரசியல் பண்ணுறான்னு தலையிலே வச்சிக்கிட்டு ஆடுனீங்க இப்ப, அவன் ஆடுற ஆட்டத்தைப் பார்த்தா அவன் அரசியலில் உங்களை மிஞ்சிடுவான் போலிருக்கிறது..."
மூத்த தலைவர்கள் ஆளாலுக்கு பேச இளம் தலைவர்கள் அமைதிகாத்தனர்.
அண்ணாச்சி முகம் என்றுமில்லா இறுக்கத்தில் இருந்தது.
அண்ணாச்சி என்ற அருணாச்சலம் அரசியலில் ஒரு பழுத்த பழம். த.ப.க கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் அண்ணாச்சி இன்றைய அரசியல்வாதிகளின் முன்னோடி...சமீப காலத்தில் கட்சியில் சேர்ந்த இளமாறன் அவர் ஜாதி (என்ன மொக்கை சாதியோ) என்பதால் அவருக்கு அவன் மீது அலாதிப்பிரியம்.கட்சி மாநாட்டில் திடீரென்று கட்சியின் "சக்திமான்" என்று மணிமகுடம் சூட்ட , மூத்த தலைவர்கள் ஆடிப்போனார்கள்...இப்படி மூத்த தலைவர்கள் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கும் இளமாறன் இன்று அதன் உச்சக்கட்டமாக இந்த அரசியல் விலகல் அறிவிப்பின் பின்ணனி என்ன?
அண்ணாச்சியின் முகத்தில் இறுக்கும் கலையவில்லை...கூட்டத்தில் சத்தம் அதிகமானது...
" அண்ணாச்சி இப்படியே அமைதியா இருந்தா எப்படி...அவன் உங்க வாரிசா இருந்தாலும் பரவாயில்லை..எவனோ ஒருத்தன் அவனை வளர விடக்கூடாது."
"ஆமா அண்ணாச்சி, இப்படியே போனா இத்தன வருசமா உங்ககூடவே அரசியல் பண்ணுற நாங்க எங்கே போறது..? அவன் எதுக்கும் துணிஞ்சவன் 'எலக்சன் கமிசன்' மேலேயே குற்றம் சொல்லுறான்...எலக்ட்ரானிக்ஸ் "வாக்கு மிசினில்" குளறுபடின்னு அறிக்கை விடறான்...இதையே காரண வச்சி அவனை அரசியலை விட்டே துரத்தணும்"
"நான் அவன் கிட்டே பேசறேன்லே"
கூட்டம் கப்சிப் ஆனது...
கூட்டம் கலைந்தது...அண்ணாச்சியின் முகத்தில் இருக்கம் மட்டும் குறையவில்லை.
தொலைபேசியை எடுத்தார்...மறுமுனையில் இளமாறன் ...
"நான் அண்ணாச்சிலே.."
"சொல்லுங்க தலைவா.."
"நாம சந்திக்கணும்"
"எங்கே வர"
"வழக்கமான இடம் தான்"
கடற்கரை...காற்று வழக்கத்தை விட அதிகம் வீச அண்ணாச்சி தலையை கோதியபடி காரை விட்டு இறங்கினார்...சில முக்கியமான இடங்களுக்கு ஓட்டுநரை அழைத்து செல்வதில்லை...இப்போதும் அப்படிதான்...அண்ணாச்சி தனியாகவே வந்திருந்தார்.
இளமாறன் ஏற்கன்வே காத்திருந்தான்.
"வந்து ரொம்ப நேரமாச்சா"
"இல்ல அண்ணாச்சி இப்பதான்"
"அப்புறம் என்ன விசேசம்லே"
"எல்லாம் நீங்க சொன்ன மாதிரிதான் அண்ணாச்சி..அரசியலை விட்டு விலகுறதா அறிக்கை விட்டேன்...தொலைபேசி தொல்லை பேசியாயிடுச்சி, தொண்டர்கள் வீடு முன்னே வந்து மீண்டும் வரச்சொல்றாங்க...நான் உங்க உத்தரவுக்கு காத்திருக்கேன்..." இளமாறன்.
சிறிது யோசித்த அண்ணாச்சி, தொடர்ந்தார்...
"இன்னிக்கே அரசியல் விலகல் சம்பந்தமா உன் வீட்டில் பிரஸ் மீட்டிங் அரேன்ஞ் பண்ணு...மீட்டிங்க நடந்துக்கிட்டு இருக்கிறப்ப, சில ரவுடிங்க உன் வீட்டு முன்னாலே வந்து உன் வீட்டை தாக்குவாங்க...அரசியலை விட்டு ஓடிப்போகும்படி மிரட்டு வாங்க..
அப்ப சில கட்சிக்காரங்க வந்து அவங்களை துரத்துவாங்க...நீ அரசியலை விட்டு விலகினா உன் வீட்டு முன்னாலேயே தீக்குளிப்பேன்னு, பெட்ரோலை மேலெ ஊத்திக்குவாங்க...நீ ஓடிவந்து அவங்களை தடுக்கனும்
" உங்களை மாதிரி தொண்டர்களுக்காக நான் மீண்டும் அரசியலுக்கு வருகிறேன்னு" அங்களை கட்டிபிடிச்சபடி ஒரு அறிக்கை விடு அப்புறம் பாருலே உன் அரசியல் எழுச்சியை..."
பிரமிப்பு அகலாமல் அவரையே உற்று நோக்கி வந்த இளமாறன், அண்ணாச்சி நீங்க தெய்வம் அண்ணாச்சி...என்று காலில் விழப்போனவனை நீதாண்டா என் அரசியல் வாரிசு என்று கட்டிக்கொண்டார். அவரிடம் இருந்து மெதுவாய் விடுவித்துக்கொண்ட படி இளமாறன், "அண்ணாச்சி எதுக்கு இந்த நாடகம்..?" பயந்தபடி கேட்டான்...
"என்ன மாறா...அண்ணாச்சி அரசியலில் பழுத்து கொட்டை போட்டவன், கட்டிவா என்றால் வெட்டிக் கொண்டுவரும் தொண்டர் படையை கொண்டவன்...என்னடா ஒரு சின்னப்பயலுக்கு இவ்வளவு பண்ணுறேன்னு பார்க்குறியாளே...இந்த கூட்டமெல்லாம் அண்ணாச்சி இதே கெத்தோட இருக்கிறவரை தான்லே, உண்மையா பார்த்தா இங்கே யாரும் விசுவாசி இல்லை. எப்படா அண்ணன் காலியாவான் திண்னையைப் பிடிக்கலான்னு இங்கே பயங்கர போட்டி...இந்த பசங்க கிட்டே கட்சியை நம்பி ஒப்படைக்க முடியாது.
அப்ப தான் உன்னை பார்த்தேன் நான் அரசியலுக்கு வந்த புதுசுலே இருந்த அதே வேகம், அதே பரபரப்பு, அதே ஞானம்..அப்பவே முடிவு பண்ணினேன் இனி இந்த கட்சிக்கு நீதான் தலைவன் என்று... இருந்தாலும் நானே உன் கிட்டே இந்த பொறுப்பை தந்தா மூத்த தலைவர்கள் ஏத்துக்க மாட்டாங்க, அது தான் தொண்டர்களே உன்னை தலைவனாக ஏற்றுக்கொள்ள செய்யவே இந்த ஏற்பாடு.
இளம் தலைமுறை அரசியலுக்கு வந்து நல்லது பண்ணனுமென்று மேடைக்கு மேடை பேசறோம்... ஆனா கிழங்களான நாங்களே நாற்காலியை விட்டு அசையலைன்னா உன்னைப் போல பொறுப்புள்ள இளைஞர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்...?
உண்மையில் அரசியலிருந்து விடை பெற வேண்டியது நீ இல்லைலே...நான் தாம்ளே..."
என்ற படி தன் தோள் துண்டை இளமாறன் தோளில் போர்த்தி விட்டு நெஞ்சம் நிமிர்ந்து நடந்தார் அண்ணாச்சி..
அடுத்த நாள் தலைப்பு செய்திகளில்...
"மீண்டும் இளமாறன்...அரசியலிருந்து விடைபெறுகிறார் அண்ணாச்சி"
பி.கு:-
- கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் 101% கற்பனையே..
- ப்ளாக் காப்பி தடைச்சட்டம் 2009 படி காப்பியடிக்க தடை செய்யப்பட்ட வலைப்பூ இது..